யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, December 11, 2007

பெ(ஆ)ண்


ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் பொருத்தமான படைப்பு தானா? பொருத்தம் என்றால், எந்த விதத்தில்? இல்லை என்றால், காரணம் என்ன?

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ! :)

---------------------------------------------- ****** ---------------------------------
காலதாமதமாக இப்பதிவை பதிப்பதற்க்காக வருந்துகிறேன். மன்னிப்பையும் கோருகிறேன். இத்துணை நாட்கள் பொறுமை காத்தமைக்கு நன்றிகள் பல !

ஆணையும், பெண்ணையும் படைத்த இயற்க்கையின் முன் இருவரும் மிகச் சிறந்த பொருத்தம் உடையவரே..உடற்கூறு அளவில்...

ஒருவருக்கொருவர் பொருந்தும் விதத்திலேயே தான், இருவரின் உடற் பரிணாமங்கள் அமைந்திருக்கிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியினால், செழித்தது, உடற்கூறு மட்டுமல்ல. மனக்கூறும் தான்.

ஆண் ,பெண் இருவருக்கும் , மனரீதியினால் அமைந்துள்ள வேறுபாடுகள், அளவிடற்கரியன. சிந்திப்பதிலும், செயல்படுவதிலும், முனைந்து செயலாற்றுவதிலும், இருவருக்கும் உள்ள வேறுபாடு மிக அதிகமே. எத்துணை தான் வேறுபாடுகள் இருப்பினும், சரிவிகித புரிதல் ஒன்றே, அவ்வேறுபாடுகளை களைந்து, நல்ல உறவு முறைக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால், இயல்கிறதா? அது தான் கேள்வி !

இருவருக்குமே உறவு முறைகளில், ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தான் மற்றொருவரை, நேசிக்கும் போது, எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே தன்னை நேசிப்பவரும், நடந்து கொள்வதே சரியானது என்று எண்ணும் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு தான், எத்துணை புரிதல் இருப்பினும், உறவில் குழப்பம் விளைவிக்கும் கூற்றாக அமைந்து விடுகின்றது.பெண் - தான் சொல்வதை ஆண் , காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் , ஆனால், எதையும் கேளாமலே, தீர்மானத்திற்கு வரும் குணவான்களாக ஆண்கள் இருப்பதாக கருதுகின்றனர். ஆனால்,ஆணோ -தான் செய்யும் ஒவ்வொரு செயலையும், மேல் நிலைப் படுத்த , பெண் எப்போதும் முயல்வதாகவும், அவர்களை அவர்கள் வழியில் செல்ல பெண் அனுமதிப்பதில்லை என்றும் கருதுகின்றனர்.

வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்குண்டான தீர்வை, தனி மனிதனாக சிந்தித்து தீர்த்து வைக்கும் குணம் ஆணுடையது. ஆனால் பெண்ணோ, தன் பிரச்சனைகளை வாய் மூலம் பிறரிடம் பேசி, தீர்மானத்திற்க்கு வரும் குணத்தை உடையவர்கள்.எந்த விஷயத்தையும், பிறரிடம் பகிர்ந்து, ஒரு முடிவுக்கு வரும் பெண்கள், நிச்சயம், பிறரை சார்ந்தே, தனக்கு வேண்டியவற்றையும் தீர்மானிக்கின்றனர். ஆனால், ஆணோ தனக்கு என்ன வேண்டும் என்பதில், தானே சுயமாக முடிவெடுக்கும் குணம் படைத்தவனாக இருக்கிறான்.

பிறரை சார்தல் என்பது, பிறரின் மேல், நம்பிக்கை இருந்தாலொழிய நடக்க இயலாது. பெண், வெகு சுலபமாக, பிறரை நம்பி விடுகிறாள். ஆனால், ஆண் அத்துணை சுலபமாக மற்றவரை நம்பி விடுவது இல்லை.பெண்ணுக்கு, ஒரு பிரச்சனைக்கு, உடனடியாக ஒரு தீர்வு தேவைப்படுவதில்லை. அவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டாலே போதும் என்ற மன நிறைவைத் தான் அவர்கள் எதிர்பார்கின்றனர். ஆனால் , ஆணுக்கு, ஒரு பிரச்சனைக்கு உடனடித் தீர்வு தேவை. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் - Result Oriented .

ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் போது, அவளுக்கு ஒரு தீர்வினை அந்த ஆண் தர வேணும் என்று எண்ணிப் பேசுவதில்லை. மாறாக, அவள் சொல்வது, முழுதும், கவனிக்கப் படவேண்டும் என்ற எண்ணத்திலேயே, தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.

ஒரு ஆண், அன்பினையும், காதலையும், பிறர் தனக்குத் தேவை என்ற நேரத்தில் மட்டுமே தான் உணர்கிறான், ஆனால், பெண்ணுக்கோ, அவ்வுணர்வு, தான் மதிக்கப்படும் போதும், பாராட்டிக் கூறப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும் உணரப்படுகிறது. ஆக, ஆணுக்கு தன் நிலைப் பற்றிய புரிதல், பெண்ணிடம் கிடைத்தாலே பெரும் திருப்தி கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு, தன்னை பற்றிய உயர்ந்த எண்ணமும், பாரட்டுதலும், ஆண் தன்னிடம் அன்பாகவும், காதலுடடையவனாகவும், இருக்கும் போதே கிடைத்து விடுகிறது.

ஆணின் தேவை, அன்னியோன்யமாக இருக்கும் போதே பூர்த்தி ஆகிவிடுகிறது அந்த அன்னியோன்ய சூழலில் இருந்து விடு பட்டவுடனே, ஆண், மிடுக்கானவனாகவும், சார்தலில்லிருந்து (dependence )விடுபட்டவனாகவும் ஆகிபோகிறான். சிறிது காலம் கழித்த பின் தான், திருப்பவும் அவனுக்கு அன்னியோன்ய சூழல் தேவைப்படுகிறது. தேவைப்படும் போது மட்டுமே, அவன் பெண்ணை சார்ந்திருக்க முடிகிறது.அவன் தேவை பூர்த்தி ஆனதும், அவனுக்கு சார்ந்திருத்தல், தேவையில்லததாக ஆகிறது. இது இயற்கையாகவே அவனுள் நடக்கும் மாற்றம்.

பெண்ணோ இநநி்லைக்கு எதிர்மறை.

விழுந்து எழும் அலைகள் போல, அவளின் உணர்வுகள் வெளிப்படும். எப்பவும் சார்தலையே அவளின் தன்மைகள் பிரதிபலிக்கின்றன. தன் சுய மரியாதை மிகும் இடங்களில், அதாவது தன் சுய மரியாதை வெகுவாக தூண்டப்படும் போது, அவள் மிகுந்த அன்பை ஆணுக்கு வாரி வழங்கி, அன்னியோன்யமாக இருக்க ஆரம்பிக்கிறாள். சுய மரியாதை சற்று குறைவாக இருக்கும் போதும், அவளால், ஆணுடன் , அன்னியோன்யமாக உணர முடிவதில்லை.

பெண்ணுக்கு, அக்கறை, புரிதல்,மரியாதை, பக்தி, மதிப்பீடு, உறுதிப்படுத்தல் ஆகியன தன் உணர்வுகளை சுலபமாக காட்டவும், கிரகித்துக் கொள்ளும், உணர்வுத் தேவைகளாக உள்ளன. ஆணுக்கு, நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளல், பாராட்டுக்கள்,ஈடுபாடு, சான்றுரைத்தல், உற்சாகப்படுத்தல் ஆகியன உணர்வுத் தேவைகளாக உள்ளன. இவ்விரண்டு நிலைகளையும் சரிவர உணர்ந்து, புரிந்து, செயல் படும் ஆணும், பெண்ணும் சரநிகர் பொருத்தம் , தமக்குள் இருப்பதாகவே உணரப்படுவர்.

தத்தம் ,துணையின் உணர்வுகளையும், இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலே, ஒருவருக்கொருவர் பொருத்தமான உணர்வை இருவரும் பெற்று விடலாம். பெண்ணைப் போல் ஆண், எப்போதும் காதல் வயப்பட்டவனாகவும், பாசம் மிக்கவனாகவும் இருக்க இயல்வதில்லை. வாழ்ககையின் பல சவால்களை அவன் சந்திக்க நேரிடும் போது அவனுள் இருக்கும் காதல் மறைந்து, அவன் கடமையும், அவனின் குறிக்கோளுமே அவன் மனதில் உணர்வுகளாக இருக்கிறது. அது அவனின் குற்றம் அல்ல. இயற்கை.

பெண்ணோ, எப்பவும் உணர்ச்சிப்பிழம்பாகவும், காதல் வயப்பட்டவளாகவுமே இருக்கிறாள். எவ்வித சவால் நிறைந்த சூழலும், அவளின் இத்தன்மையை மாற்றுவதிற்க்கில்லை. அது அவளின் இயற்கையாகிப் போகிறது, இவ்விருவரின் நிலையை புரிந்து நடந்தாலே, வீணாக உண்டாகும் விவாதங்களை தவிர்த்து விடலாம்.

ஆணை - அவன் ஒரு ஆண், அவனின் இயல்பு இன்னது தான் என்று முழுதும் தெரிந்து புரிந்து, நடத்துவதாலேயும், பெண்ணை, அவள் தன்மை இது தான் என்ற புரிதலோடு கையாள்வதாலேயும், சுலபமாக ஆண், பெண் பொருத்தத்திற்கு தீர்வு காணலாம். இயற்கைப் படைத்த ஆணும், பெண்ணும், உடல் அளவில், மிகப் பொருத்தம் உடையவரே, என்றாலும், உணர்வு பூர்வமான பந்தம் என்ற நிலையில் பார்த்தால், நாகரீகம் கருதி, ஒருவரின் நிலையை, மற்றொருவர், தெரிந்து, புரிந்து, ஏற்று நடந்தாலே, மனப் பொருத்தமும் அமைந்துவிடும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :)

Wednesday, November 14, 2007

தி ..யாகம்



தியாகம் !!

எது தியாகம்? தியாகம் என்பதற்குண்டான அர்த்தம் என்ன? எவையெல்லாம் தியாகம் என்ற வகையைச் சார்ந்திருக்கும்? ஏன்?

உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். :)

----------- ** -----------
தியாகம் என்பதைப் பற்றி சொல்வதற்க்கு முன், எல்லோராலும், தியாகம் சார்ந்த நிகழ்வுகளாக கருதப்படும் செயல்கள் பற்றி பேசுவோம்.

இரு மனம் சங்கமித்து, திருமண வாழ்வில் தியாகம், நாட்டுப் பற்றினால் மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்டால் தியாகம். தன்னையே, இழந்து பிறருக்காக செய்யப்படும் எல்லா செயல்களுமே தியாகம், பெற்ற பிள்ளைகளுக்காக, பெற்றோர் சிரமப்படுவது தியாகம்.கட்டிய மனைவிக்காக, கணவன் கட்டுண்டால் தியாகம்.ஆக, எல்லோருக்குமே, வாழ்க்கையில், ஏதோ விதத்தில் , தாம் தியாகம் செய்கிறோம் என்ற உணர்வும், அதனால், மேலோங்கி இருக்கும் ஒரு உயரிய எண்ணமுமே, தியாகம் என்பதை உயர்த்தி கூற ஏதுவாக இருக்கும் காரணங்கள்.

தியாகம் செய்தல் மிக உயர்ந்த நிலையாக பார்க்கும் பட்சத்தில், சில சமயம், கடமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு போன்றவை எல்லாமே, தியாகச் செயல்களாக எடுத்துக் கொள்ளப் படுவது தான் பரிதாபம். அதிலும், தன்னையே தியாகம் செய்வது (self sacrifice) என்ற நிலை என்னால் புரிந்து கொள்ளப்படாத நிலையாகவே உள்ளது.

யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விடும்.

தனக்கு வேண்டும் என்ற நிலையில் தான், ஒருவளோ, ஒருவனோ, திருமண பந்தத்தில் ஈடுபடுவது. அதன் மூலம், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் பெறப்படுவனவே பிள்ளைகள். பெற்ற பிள்ளைகளை சீராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பெற்றோருடையதே. இதில் தியாகம் எங்கே வந்தது.

தனக்கு வேண்டும் என்ற ஆசையிலும், ஆசையால் விளைந்த அன்பால் நிகழும் செயல்களுக்கெல்லாம் தியாகம் என்ற பெயர் சூட்டி, உண்மை அன்பையும், பாசத்தையும் முழுதும் உணராமல், தன் உறவு கொண்டாட்டத்திற்கு களங்கம் , கற்பிப்பது போல, பிள்ளையை பெற்று வளர்த்ததையே, மிகப் பெரிய தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ளும் மனிதர்களை என்னென்று சொல்வது.!

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், தன் விருப்பம் விடுத்து, மற்றவரின் விருப்பம் நிறைவேற்றுவதும், ஆகிய செயல்களின் காரணம் ஆழ்ந்த அன்பு மட்டுமே. எப்போது, ஒருவருக்கு, தான் தியாகம் செய்வது போல எண்ணம் தோன்றி, மேற் கூறிய பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவர்க்கு பூரண அன்பு மலரவில்லை என்பதை சொல்லத் தான் வேண்டுமோ.

சுயம (Self)் என்பது, எப்போதும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது. அது தான் அதன் இயல்பு. சுயத்தை,துன்புறுத்தி, யாராலும் எந்த செயலையும் செய்தல் இயலாது. தனக்கு திருப்தி அளிக்கும் செயல்களை மட்டுமே, சுயம் அனுமதிக்கும். ஆக, எந்த ஒரு செயலை, யாருக்காகவாது செய்தலும், விட்டுக் கொடுத்து போதலிலும், அடிப்படையான சந்தோஷத்தை சுயம் பெறுகிறது.

ஆத்ம திருப்தி, இல்லாமல், மற்றவருக்காக செய்தல் என்பது நடை பெற இயலாது.ஆக, பலன் என்பது, நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது.அது பொருளாகத் தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. நம் சுயம் திருப்தி அடையும் செயல்களை, அன்பின் காரணமாகவோ, ஆழ்ந்த காதலின் காரணமாகவோ நாம் செய்கிறோமே தவிர, தியாகம் செய்கிறோம் என்று எண்ணும் நிலையில், அங்கு, அன்பும் , காதலும், வேட்கையும் சாகடிக்கப்படுகிறது.

Tuesday, November 6, 2007

and A.. Abstract thinking..


எண்ணங்களே நாம். நம்மை ஆட்டுவிப்பதும், ஆர்ப்பரிக்க வைப்பதும் அவைகளே. எண்ணங்களின் தன்மையே, ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது. மனம் வேறு, அறிவு வேறு என்ற வேறுபாடுகள் பேசினாலும், இல்லை, இரண்டும் ஒன்று தான் என்று கருத்தினைக் கொண்டிருந்தாலும்,அதையும் நம் எண்ணுதல் மூலமே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும்.

அன்றாடம் நம்மை சுற்றி , நம் வாழ்வில் பல நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், அவற்றில் எவற்றை நாம் அதிகம் கிரகித்து தக்க வைத்து, அவ்வெண்ணங்களின் வழியே, உலகை உற்று நோக்குவதும், அவ்வெண்ண்ங்களின் தாக்கம் காரணமாக, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நம்மை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் கையிலே.

தீதும் , நன்றும் பிறர் தர வாரா. ஆக, எல்லாமே நாம் எண்ணுவதிலும், அவ்வெண்ணங்களைப் பற்றி தீவிர சிந்திப்பும், அச்சிந்திப்பின் விளைவாக, செயல்படுதலும், பின் செயல்பாட்டுக்குத் தகுந்த விளைவுகளையுமே அனைவரும் அனுபவித்து வருகிறோம்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பது ஒரு வகை என்றால், அந்நிகழ்வுகளை சார்ந்து, நம் எண்ணங்களை விரிவுபடுத்துதல் மற்றொரு வகை. ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளும், அதைத் தொடர்ந்து அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை தேடுவதுமே , எண்ணங்களை விரிவுபடுத்த உதவும் கருவியாக இருக்கிறது. ஆக, அறித்ல் என்பதை அடுத்து, பகுத்தறிதல் என்ற நிலையில் தான் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

சிந்தனை ஒரு விதமான சுவை.தேடல், ஒரு வகையான ஆனந்தம். ஆறறிவு கொண்ட எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. ஆனால், அச்சிந்தனையைக் கொண்டு வாழ்வில் அவர்கள் தேடுதல் என்ற நிலையை அடைவதன் மூலம் தான் அவர்களின் எண்ணம் விரிவாக்கம் பெறுகிறதா இல்லையா என்பதை கூற முடியும்.

இருப்பதை இருப்பதாக ஏற்றுக் கொள்வதில் , செளக்ரியம் உண்டு தான். ஏனெனில் , அதில் சிரமப் பட வேண்டாம். எது எதுவாக சொல்லப்பட்டதோ, அது அதுவாகவே உணரப்படும் என்று சுலபமாக சொல்லிக் கொண்டு காலத்தை தள்ளி விடலாம். காலகாலமாக, பழக்கத்தில் இருந்துவரும், நம்பிக்கைக் கோட்பாடுகளும், இத்துணைக் காலம், வேறூன்றி நின்று நிலைத்து நிற்கும், என் கலாச்சாரமும், அதனைச் சார்ந்த சம்பிரதாயங்களும், எனக்கு நல்லன தராமலா போய்விடும் என்ற எண்ணமும், என் முன்னோர்களை விட நான் என்ன பெரிதாக எண்ணி விடப் போகிறேன் என்ற எண்ணமும், இத்துணைக் காலம், சீர் காத்து வந்திருக்கும் என் பண்பாடு, என் எண்ணங்களால் சீர் குலைந்து போக நான் காரணமாக இருக்கலாமா என்ற எண்ணமுமே, நம்மில் பலரை எண்ண விரிவாக்கத்திற்கு தடை போட வைத்திருக்கிறது.

யாருக்குத் தான் எழாது கேள்வி. யாருக்குத் தான் வராது சந்தேகம். வாழ்வு என்பது இப்படித்தானா. கடைசி வரை ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டுமா. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, என்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப் பட வேண்டுமா. ஆம் ! என்றால், ஏன்.இல்லை என்றால், ஏன் ! எனக்கு என் வாழ்வில் என்ன வேண்டும், எதை நோக்கி நான்.. இவை எல்லாமே எல்லோருக்குள்ளும் எழும்பத்தான் செய்கிறது. ஆனால், அதை எல்லாம், சிரத்தையாக கவனித்து, அக் கேள்விகளுகுண்டான பதில் கிடைக்குமா, இல்லை, நான் தேடவேண்டுமா என்பதை அவரவரின் ஈடுபாடும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும், சொன்னதிற்கேல்லாம் தலை ஆட்டாமல், ஏன் என்ற கேள்வியை எழுப்பி விடை காணும் பழக்கமுமே நிர்ணயிக்கிறது.

ஆனால், அத்தகைய நிலையை அடைய அசாத்திய தன்னம்பிக்கைத் தேவைபடுகிறது. தன்னம்பிக்கை வளர்த்தல் ஒரு புறம் என்றாலும், தன்னபிக்கை ஊட்டலில் தான் ஒருவன், அத்தகைய உறுதியைப் பெறுகிறான். தன்னபிக்கை ஊட்டல், சூழலிலிருந்து தான் கிடைக் பெறும். ஆக, எச்சூழலில் ஒருவன் வளர்க்கப் படுகிறானோ, அதற்குத் தக்கவாறே, அவன் தன்னம்பிக்கை வலுப்பெறுகிறது. அவ்வலுவூட்டமே, கேள்விகளை அவனுள் எழுப்ப ஏதுவாகிறது. கேள்விகளை எழுப்பத் தொடங்கியவுடனே, அவன் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

ஏன்? என்ற கேள்வி ஒன்றே, இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். பரிணாம வளர்ச்சி என்பதற்கு முடிவு தான் ஏது. வளர்தல் ஒரு முடிவுறா பயிற்சி. ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால், வளர்ச்சி என்பது, எப்போதோ தடை பட்டு போயிருக்கும். எண்ணங்களின் விரிவாக்கமே, தடையில்லா வளர்ச்சி காண உதவும் கருவி.

எண்ணங்களின் விரிவாக்கத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது என்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மனதில் எழும் ஒரு கேள்விக்கு, ஓராயிரம் பதில்கள் உண்டு என்பதை வெகு நிச்சயமாக நான் நம்புகிறேன். ஏன்? இந்த பதிவே கூட அத்தகைய விரிவாக்கமே.

கடந்த ஆறு பதிவுகளையும், இங்கு பதிக்க தூண்டு கோலாக அமைந்த திரு.குமார் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியையும், இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து, என்னையே எனக்குள் திருப்பிப் பார்க்க வைத்து, எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.இத்துணைக் காலம், தனி ஒரு மனித குண நலன்கள் பற்றி, தனித் தனி பதிவா என்று எண்ணியும், ஆர்வம் மிகுதியால் அதை படித்து, பொறுமை காத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள். !


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, November 1, 2007

S- Solitude, O- Obvious, W -Willful,M - Magnanimous , Y for Yield


Y - Yield

பணிதல்

பொதுவாகவே பணிந்து போவதென்பதை அடங்கிப் போவதாகவும், நமக்குத் தகுந்த நிலை அல்ல அது என்பதாகவுமே ்பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஒருவருக்கு கீழ் அடங்கிப் போதல் என்பது, ஏதோ நம்மையே நாம் அவர்க்கு கீழ் அடகு வைத்தது போலே தான் உணரப்படுகிறது. கிட்டத்தட்ட தன் நிலை தாழ்தல் போலவே, பணிதல் நிலை உணரப்படுகிறது. காரணம், " நான்" என்ற தன்முனைப்பு எண்ணமே. நம்மையே நமக்கு அறிமுகப்படுத்துதலும் அதுவே.

பொதுவாகவே, மற்றவர் நமக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். நமக்கு அடங்கியிருப்பவர்களைத் தான் பெரும்பாலும் நாம் நேசிக்கிறோம். நம் சொல் பேச்சு கேட்பவர்களையும், நமக்குத் தலை ஆட்டுபவர்களையுமே நாம் அன்பு கொள்ளத் தலைப்படுகிறோம். அது தான், நாம் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த முறை என்றும் நினைக்கிறோம். காரணம், மற்றவர் நமக்கு முன், அடங்கிப்போகும் போது, நம் தன்முனைப்பு ஆனந்தம் கொள்கிறது. நம் உயரம்், அவர்கள் தலை தாழ்தலால், மேலும் உயரமாகிப் போகின்ற உணர்வைப் பெறுகிறோம்.

உற்று நோக்கினால், அப்படி ஒருவர் நமக்கு அடங்கிப்போதல் என்பது பாசாங்கு மட்டுமே. நாம் சென்றபின் , அளவுக்கு அதிகமாக, அடங்கிப்போனவர் எம்பிக் குதிக்கும் மன நிலையில் தான் இருப்பார். அதனால் தான், மேலதிகாரிகளிடம், மிகவும் அடங்கிப் போபவர், தனக்கு கீழ் இருப்பவர்களை வாட்டி வதைப்பபராகவே இருப்பார். அடங்கியிருப்பது பணிவாகாது. அது மரியாதையும் ஆகாது. அது சமயோஜித புத்தி மட்டுமே,.

பணிந்து போவதில் , கீழ்படிதலும் ஒரு வகையே. ஒரு நிகழ்வின் சகல விளைவுகளையும் புரிந்து கொள்வதால் மட்டுமே கீழ்படிதல் சாத்தியம். கீழ்படிதல் என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமால், தன் பணி சிறக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்காக ஒருவரின் பேச்சுக்கு கீழ்படிந்து போவது.எதைச் சொன்னாலும், பணிந்து போவது என்றில்லாமல், நியாயமானதிற்க்காக பணிந்துபோவதே.

அடங்கியிருத்தல், கீழ்படிதல், இவை மட்டும் பணிதலின் வகையாகாது. இவை எல்லாவற்றிலும் உயர் நிலை உண்டு. அது தான் நான் இப்பதிவின் மூலம் தெரிவிக்கவிருத்த நிலை. ஒப்படைத்தல். சரணாகதி அடைதல்.மேற்கூறிய நிலைகளில், ஒருவர் மட்டுமே ஈடுபட அதிக வாய்புண்டு. ஆனால், ஒப்படைத்தல், பரஸ்பரம் நிகழக் கூடியது. இந்நிலையில் தான் இரு " நான்" களும் காணாமல் போகக் கூடிய சாத்தியங்கள் அதிகம்,இரு நபர்கள், தத்தம் தன்முனைப்பை, தாமிருவரும் ஒப்படைக்கும் விஷயத்திற்க்காக உதறி தள்ளி உறவு பாராட்டிக் கொள்ளல் சாத்தியமாகிறது.

தம்மை முழுதும் இழத்தல் ஒரு அரிதான நிலையே. நான் சொல்லும் இக்கருத்துகள் தத்துவார்த்தமாகத் தான் இருக்க இயலும். படித்து தெரிந்து, புரிந்து கொள்ள இந்நிலை சாத்தியமே இல்லை.உணர்ந்து மகிழ வேண்டிய நிலையே இந்த ஒப்படைத்தல் நிலை.

ஒப்படைப்பவர்களுக்கு கட்டளைகள் தேவையில்லை. வேண்டுகோள் போதுமானது. அதிகார தோரணை தேவையில்லை. அன்பு செய்கை போதுமானது. குறிப்புகள் தேவையில்லை.குறிப்பறிதல் போதுமானது. சொல்வதற்கு முன்பே செயல்கள். ஆழ்ந்த உள்ளுணர்வு மிகைப்படுவது ஒப்படைத்தலினால் தான். மொட்டுகள் மலர்வது எப்படி கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் நிகழ்வாக இருக்கிறதோ, அப்படியே இந்த ஒப்படைத்தலில் உறவு மலர ஆரம்பிக்கும்.

அடங்கிப்போபவர்கள் தான் அடக்கி விடுபவர்களாகவும் ஆகிறார்கள், அத்தகையவர்கள், ஒப்படைத்தலின் சுவை தெரிந்து கொண்டால், அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இயலாமையால் கிடைத்தவையாய் இல்லாமல், அன்புமயம் என்ற ஆழ்ந்த குளத்தின் குளிர்ச்சியால் கிடைத்தவையாயிருக்கும்.

இத்தகைய சுவையை ஏட்டில் புரட்டி மட்டும் சுவைக்காமல், பரஸ்பரம் அதை முழுதும் சுவைத்த , சுவைக்கின்ற நிகழ்வை என்னால் எழுத்தின் மூலம் வடிக்க இயலவில்லை !

Wednesday, October 31, 2007

S- Solitude, O- Obvious, W - Willful, M for Magnanimous


M - Magnanimous

பெருந்தன்மை.

என்னை மிகவும் கவர்ந்த, என்னுள் எப்படியாது வளர்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட தன்மைகளில் முதல் நிலை வகிப்பது இதுவே. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்னுடைய பிறந்த ஊர். ஒவ்வொரு ஊருக்கென்று தனித்தன்மைகள், அவ்வூரின் பேசும் பாஷை போன்றவை வேறுபடும். சில விஷயங்கள் மட்டுமே நம்மை ஈர்பதுண்டு. அது போல என்னை , என் ஊர் மக்களின் பெருந்தன்மைப் போக்கும், விருந்தோம்பலும், சிறு வயதிலிருந்தே ஈர்த்ததுண்டு.என் வீட்டில் அவ்வளவாக இல்லாத ஒரு தன்மை, என்னை வெளி மனிதர்களின் பெருந்தன்மைப் போக்கினால், மிகவும் ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை தான். ஆனால், அத் தன்மையை எனக்குள் இயல்பாக கொண்டு வர, பல பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

எந்த ஒரு தன்மையும் அவரவர் வீட்டிலிருக்கும் மனிதர்களின் இயல்புகளினாலோ, அல்லது பழக்கத்தினாலோ சிறு வயது முதலே, பெரியவர்களால் ஊட்டப்பட்டும், அல்லது அறிவுறுத்தப்பட்டும், அல்லது கால காலமாக தொடர்ந்து வரும் மரபணுக்களினாலோ தான் சாத்தியமகிறது. எந்த ஒரு இயல்புக்கும், பெற்றோரின் அணுகு முறையும், அவர்கள், மிக முக்கியம் என்று அறிவுறுத்தும் பாங்குமே, நம்முள் , அத்தகைய இயல்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கிறது.

ஆனாலும், பல இயல்புகள், குடும்பத்தார் அல்லாத மற்றவரின் பங்களிப்பாலேயே நம்முள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எத்துணை பேர், அத்தகைய மாற்றத்திற்க்கு தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவரவர் கையிலே தான் உள்ளது. உலகைப் புரிந்து கொள்ளத வயதில்,. தாய், தந்தை, மற்றும் குடும்பத்தாரின் மூலம் கற்றுக் கொண்ட சில நன்மை தராத இயல்புகளை, உலகம் புரியும் வயதிலேயும், நம்மிடையே வைத்துக் கொண்டு, " நான் இப்படித்தான்" என்று தான் பலரும் சொல்லிக் கொள்கிறோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இயல்புகள் , தன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால். அவற்றை தம்முடையதாக்கிக் கொள்ள தீராத ரசனை மிகவும் இன்றியமையாததாகிறது.



எதை நாம் ரசிக்கிறோமோ, அதன் பாலே தான் நாம் ஈர்க்கப்படுகிறோம். எது நமக்குப் புரிகிறதோ, அதன் பால் தான் நம் ரசனையும் செல்லும். அவ்விதமாக எழும்பும் ரசனையை, ரசனை என்பதோடு மட்டும் விட்டு விடாமல், அதை எத்தகைய வழியில் நமதாக்கிக் கொள்கிறோம் என்பதில் தான், நாம் நம்முள் நாம் வளர்க்க விரும்பும் இயல்புகளும் அமையப் பெறுகின்றன.

என் வாழ்க்கையில், இத்தகைய ரசனை தான், பெருந்தன்மைப் போக்கை எனக்குள் நான் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகப் பதித்தது. சொல்லப் போனால், பெருந்தன்மை போக்கு உள்ளவரெல்லோருமே, நல்லவர்களாகத் தான் அன்றும், இன்றும் எனக்குத் தெரிந்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. வாழ்க்கையின் எத்தகைய நிகழ்விலும், இந்த பெருந்தன்மைப் போக்கானது, எதிர்மறையான விளைவுகளை புரட்டிப் போட்டிருக்கிறது.

இரு சகோதரர்களுக்குள்ளே நடைபெறவிருக்கும் சொத்து பாகப்பிரிவினையில் கூட, ஒருவரின் பெருந்தன்மைப் போக்கானாது, மற்றவரின் மனதை நொடிப் பொழுதில் , முழுதும் மாற்றிய விந்தையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நல்ல உறவு முறைகளுக்கு அன்பு எப்படி ஆதாரமோ, அதே போல் தான், பெருந்தன்மைப் போக்கும், நல்ல உறவு முறைகள் காலங்காலமாய், சீர் பட நிலைத்து நிற்கக் காரணமாய் விளங்குகின்றது.

பெருந்தன்மையினால், ஒருவர் உயர உயர செல்கிறாரே அன்றி, அவர் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அடிக்கடி, மனதிலெழும், வள்ளுவனின் வாக்கு,

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்"

- இக்குறள் பெருந்தன்மையையே பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். அகிம்சை வழி என்பது எப்படி, வீரியமிக்க வழியோ, அதே போல தான், பெருந்தன்மைப் போக்கும், வீரியமிக்கது.சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் இத்தன்மை வியக்கத் தக்கதே. அதெல்லாம் குடும்பத்திலேயே வரணும்" - என்று அங்கலாய்பதில் அர்த்தம் இருந்தாலும், பிரயத்தனப்பட்டாகினும், இத்தன்மையை நமக்குள் நாம் வளர்க்க முயற்சித்தால், இத்தன்மை நம்மையும், நம்மைப் போல் பிறரையும், நல்ல உறவு மேம்பாட்டில் எப்போதும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Monday, October 29, 2007

S- Solitude, O- Obvious, W for Willful


மனத்திட்பத்துடன் (Willful) கூடிய மனத்திண்மை(Determination).

பொதுவாகவே எந்த ஒரு செயலுக்கும், அது செம்மையுற நடைபெறவும், நம் மன ஓட்டமே காரணமாக அமைகிறது. இச்செயலை நன்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில், அதை நன்கு செய்து முடிப்பதும், இச்செயல் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று எண்ணுகையில், அதனை அத்துணை முனைப்போடு செய்யாமல் போவதும், நம் மனத்தினால் எழும் எண்ண ஓட்டங்களினாலேயே நிகழ்கின்றது. ஆக, ஒரு செயல், அதனை செய்யும் திறன், அத்திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நற்பயன் காணும் போக்கு எல்லாமே நம் மனத்திட்பத்தாலும் அதனை அடுத்து நமக்கு கிடைக்கும் மனத்திண்மையினாலுமே அமையப் பெறுகிறது.

எப்படி, அதிகாலை துயில் எழ, உடம்பைப் பழக்க வேண்டும் என்று எண்ணி, அதனை தினமும் மேற்க் கொண்டு உட்லை பழக்குகிறோமோ, அவ்வாறே, நம் மனத்திண்மையையும் பழக்கப் படுத்திக் கொள்ளலாம். எல்லாமே பழக்கத்தில் அமைவது தான் .சித்திரமே கைப்பழக்கத்தில் அமையப் பெறும் போது, மற்றதெல்லாம் எம்மாத்திரம்.

முதலில்,செயலைச் செய்வதில் மனத்திட்பம் என்றால் என்ன, என்று பார்ப்போம். எந்த ஒரு செயலையும், இதை செய்தால் என்ன, என்று தீர்க்கமாக எண்ணுவது தான் மனத்திட்பம். தீர்க்கம் என்ற நிலை உண்டாகும் போதே, அச்செயலை செய்ய ஒரு வித ஈடுபாடும், அச்செயலை எப்பாடு பட்டாகினும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் பெறுகிறோம்.

மனத்திட்பம் என்பது, முதலில் நம்மை ஒரு செயல் தொடங்க நம்மை ஈடுபடுத்தும் செய்கை தான்.இதைத் தான் When there is a will, there is a way என்று கூறியிருக்கிறார்கள். ஒரு செயலில் நம்மை முனைக்கச் செய்யச் செய்தாலே போதும், அச்செயலை ,எத்தகைய வழியில், அதை சீர்படச் செய்யும் வழி தானாகவே புலப்படும்.வழி புலப்பட புலப்பட, அச்செயலை செய்யும் ஆர்வமும், அதனை செம்மையுற செய்து முடிப்பதில், உறுதியும் பிறக்கும். மனத்திட்பத்தை நமக்குள் பழக்கினாலே, மனத்திண்மையை நாம் பெறுவது உறுதி.

மனத்திண்மை என்பது, நம் ஆளுமைத்திறனை(Personality development) வளர்க்கச் செய்ய பெரும்பாலும் உதவுகிறது. எப்போது, ஒரு செயலைச் செய்ய நம் மனத்திட்பத்தினால் , அதனை அணுகுகிறோமோ, அப்போதே, அச்செயலினால், நம் ஆளுமையில் (Personality), வாக்குறுதி (அ) கடமைத் திறன் (Commitment) அதிகரிக்க ஆரம்பிக்கிறது. கடமைத்திறன் அதிகரிக்க அதிகரிக்க, நம் பொறுப்புக்களை (responsibilities) முழு ஈடுபாட்டோடு நாம் எடுத்து செய்ய, நம் ஆளுமை பழகிக்கொள்கிறது.

பிறகு, எந்த ஒரு செய்லை நாம் செய்ய, அதில் ஈடுபட்டாலும், நாம் வளர்த்த மனத்திண்மையானது, அச்செயலை, கடமைத்திறனுடனும், தலையாய பொறுப்புடனும், செய்து முடிக்க வழி நடத்துகிறது. இதுவே பழக்கமாகி விட்ட பட்சத்தில், நம் ஆளுமை, எச்செயலையும் கச்சிதமாக (perfect) செய்து முடிக்கவே செய்யும். கச்சிதமாக முடிக்கும் மனோபாவத்தைப் பெற்று விட்டாலோ, எதையும் இலகுவாகவும், ஆர்வத்துடஞும் அணுகும் வித்தை நமக்குத் தெரிந்து விடும்.

என்னுள், இத்திறன் இயல்பாக அமைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆனாலும், பல செயல்களுக்கான வித்தை, பலரின் துணையோடு தான் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முனைக, வளர்க ! :)

Wednesday, October 24, 2007

S for Solitude - O for Obvious


Obvious

புரிதல் - தெளிவாக புரிந்து கொள்ளுதல். இத்தன்மை என்னுள் இயல்பாக இருக்கிறதா, அல்லது நானாக என்னையும் அறியாமல், அதன் பால் ஈர்க்கப்பட்டு அத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தேனா என்பது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கும், அதனைச் சார்ந்த விளைவுகளுக்கும், இந்த புரிதல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, என்னுடைய அபிப்ராயம். எங்கே நாம் புரிந்துக் கொள்ளப்படுகிறோமோ, எங்கே நம்மால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதோ, அங்கு ஒரு செளகரியமும், திருப்தியும் உண்டாக்கப்படுகிறது. செளகரியமாக உணர்ந்தாலே, நமக்கு தேவையான சூழல் கிடைத்து விடுகிறது. நல்ல சூழல் அமைந்தாலே, நல்ல உறவும் மேம்படுகின்றது.

பிரச்சனைகள் என்பது அறவே உண்டாகாமல், தடுக்கும் வழியாகவே இப்புரிதலைக் கொள்ளலாம். எல்லோருக்குமே, புரிதல் என்பது முக்கியமானதாகவே கருதப்படுகிறது. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க .. என்பது தான் பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பு. பல பிரச்சனைகளை நம்முடைய நிலையில் இருந்து மட்டுமே பார்பாதாலும், பரிசீலிப்பதாலுமே, அப்பிரச்சனைக்கு சரியான தீர்வை சுலபமாகவும், நடு நிலையாகவும் எடுக்க முடியாமல் போகிறது. நம்முடைய சூழ்னிலைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே, பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. எனவே தான், நம் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதாக நமக்குப் புரிகிறது. அதனாலே, நாம் பாதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்ற உணர்வும் எழுகிறது.

நமக்கென்று வரும் பிரச்சனைகளி நாம் பாதிக்கப்படும் போது, நாம் உணர்ச்சிகளின் ஆழத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதனாலேயே, மற்றவரின் , உணர்வுகளும், அவர் பக்கம் இருக்கும் நியாயங்களும் நமக்கு புரிவதில்லை. நம் காயம் தான் பெரிதாக உணரப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவரின் செய்லும் அல்லது நடத்தையும் பூதாகாரமாகவே தோற்றமளிக்கிறது. இது தான் உண்மை நிலவரம் என்று நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலோ நம்முடைய உணர்வுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகி, ஏற்ப்பட்ட காயம், ரணமாக ஆகி, வடுவாகவும் பதிந்துவிடுகிறது.

இத்தகைய நேர்வை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அல்லது முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்.

என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)

Saturday, October 20, 2007

A for Apple -- S for Solitude !


தானாக கோடு போட்டு, அதன் மேலும், கீழுமாகவும்,அல்லது அதன் மேலேயேவோ செல்வது என்ற இயல்புப் படியே இதுவரை என் பதிவுகள் இருந்து வந்திருக்கின்றன. சுருங்கச் சொன்னால், என் இஷ்டப்படியே என் பதிவுகளும், அதன் சாராம்சங்களும்.

இப்போது புதிதான ஒரு அனுபவம் தரும் வண்ணம், குமார் அவர்களின் உந்துதலின் பேரில், என்னுள் நான் விரும்பும், வளர்க்க ஆசைப்படும் இயல்புகளைப் பற்றித் தனித்தனிப் பதிவுகளாக எழுத முயன்றால் என்ன..என்ற எண்ணத்தோடே, இப்பதிவானது சம்ர்பிக்கப்படுகிறது.

உங்க சொந்தகதை, சோகக்கதைலாம் எதுக்குங்க இங்க...! என்ற எதார்த்த எண்ணமிருப்பவர்கள், பின் வரும் ஒரு சில பதிவுகளை, ஒரு குறிப்பிட்ட தலைப்பில், நான் சொல்ல விருப்பப்படும் கருத்துக்களாக மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Solitude - தமிழில் இதற்கு " தனிமை" என்ற பொருள். பொதுவாகவே, தனிமை என்பதே ஏதோ, வெறுமையான உணர்வு போலவும், ஒவ்வாத ஒன்றாகவுமே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அடடா..! தனிமை என்னை இப்படி வாட்டுகிறதே என்று புலம்புவதற்கும், ஆகா..! என்ன ஒரு அருமை இந்தத் தனிமை - என்று புளகாங்கிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள்: உண்டல்லவா.

ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால்..,

Like to be alone is completely different from feeling loneliness. A person who like to be alone, chooses the environment where he/she feels the enjoyment within himself/herself. It is a tendency of being detached from the group, without planning or trying to be alone from the group. No one can do any practice to develop that tendency of being alone.

The exact meaning for loneliness is unhappy .Because you have no friends or people to talk to, you feel the loneliness. Loneliness is a sad feeling feel by a person when he misses something aroud him. But aloneness is, something , a person like to be with.


I am not saying, being alone is heaven for someone who really don’t want to be alone. There are people who like to be with a group, like to share things with the group. I am not declaring , aloneness fetches you heaven in earth, if you adopt that. Instead, I said, the people who like to be alone finds more enjoyment with their aloneness.

I can even say in a simple way too. Sharing needs two people atleast. If the other person , whom we like to share our things may differ from the thoughts of what we share to him/her. Sharing expects recognition.

Why we like to share things?.

We like to put ourself in a comfort zone by sharing. It is one of the way of getting recognition from the person to whom we share our things. Its all depend upon the person. We would like to share our things to people who are ready to listen/accept/console. Sharing doesn’t mean to be positive all the time. It also includes criticisms/difference of opinions.

Sharing can happen with a person often, if he/she gives you the comfort of understanding. We cant share things with everyone, even when we like to be in the group. Sharing is possible only with people who has better understanding about us and about the concept what we deliver. It’s a kind of happiness we feel, when someone really understand us or listen us wholeheartedly. Most of the people prefer to share things with others. They feel some peace by sharing.

The people who prefer to be alone feels the same peace , even they are out of group. I am not degrading the people who like to be with the group. But I can say, for SOME, being alone is preferable and they feel more enjoyment while they are alone compare to be with the group.

So(w) I am :)

Saturday, September 29, 2007

அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது !!



ஒரு வீட்டில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம்..

"அம்மா ! ஏம்மா, நம்ம கிட்ட கார் இல்ல...மாமா கிட்ட இருக்கு...."

- "அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா..நாமெல்லாம் ஏழை..நம்ம கிட்ட பணமில்ல.."

"நாம ஏம்மா..ஏழை.... அதிர்ஷ்டம்னா ப்ணமாம்மா..?"

- " இல்லடா..அதிர்ஷ்டம் இருந்தா பணம் இருக்கும்..பணம் இருக்கறதுக்கு அதிர்ஷடம் வேணும்டா.."

"அப்பாவுக்கு ஏம்மா அதிர்ஷ்டம் இல்ல.."

- "தெரியல.."

"உனக்கு அதிர்ஷ்டம் இருக்காம்மா"

-"உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"

"எனக்கு இருக்காம்மா அதிர்ஷ்டம்.."

-உனக்காது இருக்கட்டும்..

இதே பாணியில் இல்லாவிட்டாலும், இதே கருத்து பலரிடம் நிலவுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன? அது பலருக்கு, எதிர்ப்பார்ப்பு, கனவு,ஆசை. நிஜ வெய்யிலிலிருந்து இளைப்பாற பொய் நிழல்

அதிர்ஷ்டம் என்பதை மச்சம் என்றும், ஜாதகம் என்றும், வரம் என்றும், முற்பிறப்பின் பலன் என்றும் காலங்காலமாய் கூறி வந்தாலும், விஞ்ஞான பூர்வமாய், இது சரியா என்று ஆராயப்படவில்லை.எனினும், மனவியல் ரீதியாக, இதற்கு பிண்ணணி இருப்பதாகவே கொள்ளலாம்.

பரீட்சைக்கு, அதிர்ஷ்டமான பேனாவை கொண்டு செல்வதிலிருந்து, திறமையானவர்கள் கூட, இந்த ஷ்ர்ட், ஷீஸ் அதிர்ஷ்டமானது என்று வைத்துக் கொள்வது, மனத்திறனோடு சம்பந்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திறமை, சக்தி, ஆர்வம், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தீர்மானம் இருப்பவர்கள் கூட, அதிர்ஷ்டம் தேவை என்று நினைக்கக் காரணம் என்ன? அச்சம் மட்டுமே.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, அதிர்ஷ்டத்தை வேண்டுவதாகாது. நனறாக, தயார் செய்து கொண்ட பின்னும், ஒரு செயலைச் செய்ய தக்க திறமையைக் கொண்டிருந்தும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லாமும் நல்ல விதமாக நடக்கும் என்ற எண்ணத்தை ஒரு கவசம் போல கொள்வதினால், தன்னம்பிக்கை என்ற வேர் பழுது படாமல், பார்த்துக் கொள்ள ஏதுவாகிறது.

தன் மேல் எத்துணை நம்பிக்கை வைத்தாலும், தன் செய்லகளின் விளைவுக்கு தான் காரணம் அல்ல. என்ற ஏண்ணமே , இத்தகைய போக்கினை வளர்க்கிறது. முதல் காரணம் அச்சம், அடுத்தது, தன்னம்பிக்கை குறையாமல், அவ்வேலையை செவ்வனே செய்ய, தன் சக்தியை மீறி , வேறொரு சக்தி தேவைப்படுவதாக எண்ணும் எண்ணமே, அதிர்ஷ்டம் என்பதை எதிர் பார்த்துக் காத்திருக்கச் செய்வது.

அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மனிதன் எப்போது நம்ப ஆரம்பிக்கின்றான். எப்போதுமே ஒருவர் வாழ்வில் வெற்றியோ, நல்ல நிகழ்ச்சிகளோ நடை பெறும்போது, அதிர்ஷ்டம் பற்றி அவன் சிந்திப்பதேயில்லை. சட்டென்று தோல்வியை சந்தித்துக்கும் போது, அடுத்து நடைபெறும் காரியத்தில் தனக்கு நிச்சயம் வெற்றிக் கிட்டுமா? எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா? என்று ஆராய்தல் அவனுள் ஏற்படுகிறது.

இது இயல்பு தான். தடுக்கி விழப்போகும் நேரத்தில் தானே, தடி தேவைப்படும்.எப்படியாது, இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற பதட்டம் நேரும் போது தான், பயம் ஏற்படும் போது, ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்க்கு வலுவூட்ட. அத்துணையாகத்தான், அதிர்ஷ்டம் பற்றிய எண்ணமும், அதனை சார்ந்த செயல்களான, நல்ல நேரம், ஜாதகம் , எண் கணிதம், போன்றவை பார்த்தலும் ஏற்படுகின்றன.

அதிர்ஷ்டம் என்பது ஒரு வித நம்பிக்கையே. உலகம் முழுதும் இந்த விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. வீட்டில் இயந்திரம் கட்டினால், செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். அப்படி கொட்டி விடுகிறதா. ஆனாலும், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நோக்கத்தில் , செய்து தான் பார்போமே, என்ன தான் ஆகிறது என்ற எண்ணத்தில் செய்யப் படுவன தான் ,இயந்திரம், வாஸ்து, குபேரன் சிலை வைப்பது, வீட்ட்ன் நுழை வாயிலில், கண்ணாடி வைப்பது போன்ற செயல்கள்.

ஆனால் அதற்காக, நாம் செய்ய வேண்டிய தொழிலையோ, காரியங்களையோ நாம் செய்யாமல், அதிர்ஷ்ட்ம் எனக்கு உண்டு, என் ஜாதகமே சொல்கிறது என்று பேசாமல் இருந்து விடுகிறோமா. மனதிற்க்கு ஒரு ஆறுதல், ஒரு விதமான பிடிப்பு, எல்லாமும் செய்து, அதிர்ஷ்டம் வரவழைக்கும் வழியையும் செய்து விட்டாகி விட்டது. இனி கவலை இல்லை,. நடப்பது நடக்கட்டும் என்ற மனத் திண்மையை அடைவதற்காகவே அதிர்ஷ்டத்தை நம்பவும், விரும்பவும் செய்கின்றனர் பலர்.

ஆக அதிர்ஷ்டம் என்பது என்ன? நல்ல முறையில் எல்லாம் நிகழும் போது, அதன் தொடர்பாய், நினைவாய், பொருளோ அல்லது நபரோ இருந்தால், அது நமக்கு தொடர்ந்து விளைவிக்கும் அமைதியே அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆக அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே. இச்சாதனங்கள் அமைதி மட்டுமே தரும். வெற்றி பெற முயற்சி ஒன்றே வழி. இது அனைவருக்கும் தெரிந்ததே.

" பார்வை இலக்கில் பதித்து விட்டால், பள்ளம் மேடு எதுவுமே பாதையில் கிடையாது"

" எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு "

- இந்தப் பார்வை நமக்கு வரும் வரை, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையை கைத்தடியாய் வைத்துக் கொள்வதில் தவறில்லை. கண் திறந்து விட்டால், காட்சி தெரிந்து விடும். பாதை தெரியும், பயணம் புரியும். புரிந்தால், நடக்க வலு வந்து விடும். வேகம் கூடும். அப்போது எந்த வித தடியும் தேவைப்படாது.

Wednesday, September 26, 2007

வாழ்க்கை - அர்த்தம் ? (தொடர்ச்சி - II )



இனிக்கச் சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, நாம் ஏன், வாழ்க்கை என்பதே ஒரு குறிக்கோளுக்காகத் தான் என்று உருவகப்படுத்தி, அக்குறிக்கோளை அடைந்து விட்டால், வெற்றி கண்டதாகவும், அக்குறிக்கோளை அடையா விட்டால், தோல்வியை தழுவியதாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம்.

இலக்கு என்பதை வெகு சுலபமாக, அமைத்து விடுகிறோம். அதனை அடையும் வழியைத் தான் வெகு கடினமாக வகுத்துக் கொள்கிறோம். அதற்க்காக போராடவும் செய்கிறோம்.இதே போக்கில் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டால், அந்த போராட்டம் எப்போதுமே தொடர்வதாகத் தான் வாழ்வு அமையும். ஏனெனில், நமது குறிக்கோள்கள், வாழ்வின் போக்கின் படி மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒன்றை சாதித்து முடித்த பின், அடுத்தது என்ன சாதிக்க போகிறோம் என்ற மன நிலையே மிஞ்சும். அதற்காக குறிக்கோள் இல்லாமல் இருந்து விடு என்று கூறவில்லை. வாழ்க்கைக்கு என்பதற்க்கு தனியான குறிக்கோள் இருக்கிறது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே என்று தான் கூற விழைகிறேன்.

பின் எப்படித் தான் வாழ்வை எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வி எழுகிறது ! இல்லையா ! வெகு இயல்பாக, சுலபமாக, பதமாக, இதமாக, எதார்த்தமாக, வாழ்வை எடுத்துக் கொள்ள தெரிந்தாலே, வாழ்க்கை வெகு சுலபமாகிப் போய்விடும்.குழந்தைகளைப் போல.வாழ்வை தம் போக்கில் சுகமாக்கிக் கொள்ளும் ஜீவன்களைப் போல, இருக்க முயன்று விட்டாலே, வாழ்க்கையின் அற்புத சுவை தெரிய ஆரம்பிக்கும். இப்போது ,இன்னது தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொள்ளாமல், மனம் சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், பிடித்த விஷயங்களை செய்து, பிரயத்தனமே இல்லாமல், தன் விருப்பப்படி வாழக் கற்றாலே, வாழ்க்கை பிரியமாகிப் போகும்.மனதில் எப்போதும் சந்தோஷக் கூத்தாட்டம் கிடைக்கும்.அந்தந்த நிமிடம், வாழும் கலை தெரியும்.

யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஓட்டம், நம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. இப்படியே தொடர்ந்து ஓடுவதால், கடைசியில் மிஞ்சப் போவது சோர்வே. அச்சோர்வை அடைந்த பின் தான் தெரியும் , நாம் ஏன், எதற்க்காக ஓடிக் கொண்டிருக்கிறோம், அதனால் ஏற்ப்பட்ட விளைவு என்ன என்பது..

மூன்று தாரக மந்திரத்தை அவ்வப்போது நமக்குள் சரி பார்த்துக் கொண்டாலே போதும், வாழ்வு சுலபப்பட்டு விடும். என் விருப்பப்படி, என் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறதா? வாழ்வின் எல்லா நிமிடங்களிலும், என் சந்தோஷம் கெடாமல் என் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளேனா? ஒரு குழந்தையைப் போல் என்னை நான் உணர்கிறேனா? இக்கேள்விகளுக்கு, திருப்தியான பதில்களை உங்களால் கொடுத்துக் கொள்ள முடிந்தாலே, உங்கள் வாழ்க்கை அற்புதமாக, உங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது ஒரு சூன்யம். ஒன்றுமே இல்லாதது. வெங்காயம் போல. உள்ளே எதாவது இருக்கிறதா என்ற ஆவலோடு தான் அதனை உரிக்க ஆரம்பிக்கிறோம். உள்ளே செல்ல செல்லத் தான், ஒன்றுமே இல்லை அங்கே என்பதை கண்டு கொள்ள நேரிடுகிறது. ஆனால், கண்டு கொண்டு சுதாரிக்கும் போது, நம் வாழ்க்கை முடியும் தருவாயில் போய் விடுகிறது. எத்துணை சீக்கிரம், வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை நாம் கண்டு கொள்கிறோமோ, அத்துணை சீக்கிரம், வாழ்க்கை சுலபமாகவும், சுவாரஸியமாகவும் ஆகிப்போகிறது.

எனவே, நமக்குள் கற்றறிவு நிரம்ப இருந்தாலும், குழந்தை தனத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்காமலும், குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே, வாழ்க்கை எனும் வெங்காயத்தை கண்ணீர் சிந்தி உரித்து, அதில் ஒன்றும் இல்லை என்பது உரிக்காமலேயே தெரிந்து கொள்ள சாத்தியப்பட்டுவிடும். அதனால் நமக்கு மிஞ்சப் போவது , நேரமும், அதனால் ஏற்படக் கூடிய விரையமில்லா வாழ்வுமே.

வாழ முயல்வோமா !

Monday, September 24, 2007

வாழ்க்கை - அர்த்தம்? ( தொடர்ச்சி - I)



நீண்ட கால அவகாசம் எடுத்தமைக்கு மன்னிப்பை கோருகிறேன்.எதிர்பாரத விதமாக அவகாசம் எடுக்க வேண்டியதாயிற்று.தங்கள் பொறுமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்:)

வாழ்க்கை - இதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். வாழ்வது தான் வாழ்க்கை. அவ்வளவாக மட்டுமே அதன் நோக்கம் இருக்க முடியும். ஆனால், நமக்கோ வாழ்க்கை என்பது தீர்த்து வைக்கும் பிரச்சனையாகவும், பிறப்பெடுத்ததே அதற்க்காகத்தான் என்பது போன்ற நோக்கம் கற்பிக்கப் பட்டது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.அல்லல் படுவதும் வாழ்க்கை என்பதும் தனித்தனி சொற்கள் இல்லை என்பது போலத் தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

எந்த நோக்கத்திற்க்காக நாம் பிறப்பெடுத்தோம் என்ற கேள்வி எல்லோர் மனதையும் தொடாமல் விட்டதில்லை. அர்த்தம் என்பது எல்லாவற்றிக்கும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய மனப்போக்கோடு நம் அணுகு முறை, எல்லா விஷயங்களிலும் இருப்பதினாலேயே, வாழ்க்கை என்பதும் ஒரு நோக்கத்திற்க்காக உண்டாக்கப் பட்டதாக நமக்கு எண்ணத் தோன்றுகிறது. சொல்லப் போனால், தத்துவார்த்தமாக வாழ்க்கையைப் நோக்கினால், அவரவர்க்கு ஏற்ற எண்ண வீச்சிற்க்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப வாழ்க்கைக்கு அர்த்தம் என்பது ஏற்படுகிறது. ஆனால் ஆன்மீக ரீதியில் வாழ்க்கையை உற்று நோக்கினால், வாழ்க்கைக்கு வாழ்வது என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என்பது புலனாகும்.

வாழ்க்கையை அது போகும் போக்கில் சென்று வாழ்ந்து அனுபவி - இது மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவனிடத்தில், வாழ்க்கை என்பதற்க்கு அர்த்தம், சுவையானதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அப்பொழுதும், அதற்கு இன்னது தான் அர்த்தம் என்பதை அவன் தெரிந்து, வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான் என்று சொல்ல முடியாது. எவ்வித அர்த்தமும், நோக்கமும் கற்பிக்கப் படாமல், வாழ்க்கை எப்படி செல்கிறதோ, அதன் வழியே சென்று அதை முழுதும் சுவைத்து அனுபவிக்க மட்டுமே அவன் கற்றுக் கொண்டு வாழ்கிறான் என்று தான் கூறமுடியும்.

நம்மில் பலருக்கும், வாழ்க்கை திருப்தி அளிக்கும்படியே இருக்கிறது. எப்படி? வாழ்வை பிரச்சனையாக நினைத்து, அப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயன்று , அதில் வெற்றி காணும் போது ஏற்படும் திருப்தி தான், வாழ்வு தரும் ச்ந்தோஷமாக நம்மால் உணரப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷம் என்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் அணுகும் முறை பெரும்பாலும், இப்படித்தான் இருக்கிறது.வயது முதிர முதிர, நமக்கு,இப்படித்தான் வாழ்வை அணுக வேண்டும் என்ற முறை சமுதாயத்தால் கற்பிக்கப் படுகிறது.

பிறந்த குழந்தையாக இருக்கும் போது, நாமே வாழ்வாகத்தான் பிறக்கிறோம். அத்துணை சக்தியோடு தான் நாம் இருக்கிறோம். நம்மில் இருக்கும் அந்த சக்தியை எந்த வித தடைகளுமின்றி செயல்படுத்தி ஆனந்தம் கண்டோம். காரணமே இல்லாமல் துள்ளிக் குதித்து மகிழ்ந்ததும் அதனால் தான். காரணம் வெகுளித்தனம்.வயதாக ஆக, எப்போது, வாழ்வை வாழ வேண்டும் என்ற விழிப்பு நமக்குள் நேரிடுகிறதோ, அப்படி இருத்தல் தான் வளர்ச்சியின் அறிகுறியாக நாம் முறைப்படுத்தி கொண்ட பட்சத்தில் வெகுளித்தனம் மறைந்து புத்திசாலித்தனம் மேலிட ஆரம்பிக்கிறது.

ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும், வெகுளித்தனம் மட்டுமே வாழ்வை அதன் போக்கிலேயே சென்று வாழ வழி வகை செய்ய முடியும். விஷய ஞானம் அளிக்கும் புத்திசாலித்தனம் தான், வாழ்க்கையை கடினப் படுத்தி, சுலபமாக வாழ வேண்டிய வாழ்க்கையை, கடினமான பாதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வேகுளித்தனம் மிகுந்தவர்களின் வாழ்வு, நிச்சயமாக புத்திசாலித்தனம் மிகுந்தவர் வாழ்வை விட சிறப்பாகத்தான் இருக்க முடியும்.

அதனால் தான் வெகுளித்தனம் மிக்க குழந்தைகளால், வாழ்வை அத்துணை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் சிறக்க வாழ் முடிகிறது. எப்போது, வெகுளித்தனத்தை , முற்றிலும் போக்கி, புத்திசாலித்தனத்தை மனம், அடைய முயல்கிறதோ, அப்போதே வாழ்வின் உண்மையான சுவை, வேறு விதமாக மாற்றப்பட்டு, இது தான் வாழ்க்கையின் சுவை என்று நமக்கு நாமே வகுத்துக் கொண்டு, நாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். இது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. எது ஒன்று இயற்கைக்கு முரண்பட்டு நிற்கிறதோ, அது நிச்சயமாக பலவீனமானதாகவும், நிரந்தரமில்லாததாகவுமே இருக்க முடியும். மாயை என்பதும் இது தான். இருப்பது போல இருக்கிறது. ஆனால், இல்லாததாகத் தெரிகிறது. வாழ்க்கை என்பது பல நேரங்களில் கசந்து போவதற்கு காரணம்,சில சூழ் நிலைகளில், அந்த எதார்த்தத்தை மனம் உணர்ந்து திரும்புதல் தான்.

( பதிவு நீண்டு விட்ட காரணத்தால் , அடுத்த பதிவில் தொடரலாம் என்று நினைக்கிறேன் )

Saturday, September 8, 2007

வாழ்க்கை - அர்த்தம்?


"வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்..

என்னடா பொல்லாத வாழ்க்கை..

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்..

மேற்கூறிய பாடல்கள் எல்லாமே வாழ்க்கை என்பது இப்படித் தானோ என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாடல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை என்பதே ஒரு நோக்கத்திற்க்காகத் தான் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது என்று தான் ஆதி முதல் அந்தம் வரையிலான, நமது புராணங்களும், இதிகாசங்களும் சொல்லி வந்திருக்கின்றன.

வாழ்க்கை என்பதன் குறிக்கோள் என்ன? வாழ்க்கையில் எதை நாம் தேடுகிறோம்? நம் பிறப்பின் பலன் என்ன?எதை சாதிக்க நாம் பிறந்தோம்? - இத்தகைய கேள்விகள் தொட்டுச் செல்லாத துடிப்புள்ள மனங்கள் குறைவு. அவரவர் சூழலுக்கேற்ப்வும், ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்பவும், நாம் இத்தகைய வினாக்களுக்கு தத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விளக்கங்களை தேடி,அவ்விளக்கங்களில்,சிலவற்றிக்கு உடன்பட்டும், சிலவற்றிற்கு உடன்படாமலும்,மேலும் சிலவற்றிக்கு, குழம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி..இது போன்ற கேள்விகள் எப்போது எழுகின்றன. அறிவின் தாக்கத்தை அறியும் வயதில் தான் இது போன்ற கேள்விகளும், தேடல்களும் அரும்ப ஆரம்பிக்கின்றன. கூர்ந்து கவனித்தோமேயானால், இவ்வகையான தேடல்களுக்கு முன் , நாம் எப்படி இருந்திருக்கிறோம்?. அதாவது, நம் குழந்தை பருவத்தில் நாம் எப்படி வாழ்வை எதிர் நோக்கியிருக்கிறோம் என்று சிந்தித்தால், எல்லோருக்குமே அதற்குண்டான விடை தெரியும். சின்ன வயசுல, நான் எவ்வளவு அற்புதமாக வாழ்கையை வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா..? என்று தான் பெரும்பாலும், சிறு பிராய வாழ்க்கையை ரசித்து கூறுபவர்கள் இருக்கக் கூடும். இது ஏன்? அத்தகைய வயதில் நமக்கு நிகழ்ந்தவை என்ன?

சிலர் கூறுவர் - " அந்த வயசுல..பெருசா பொறுப்புன்னு எதுவும் இல்ல.." ;

"எதெல்லாம் ரசிக்க முடியுதோ..சந்தோஷம் தருதோ..அதை எவ்வித தயக்கமும்மின்றி அந்த வயசுல பண்ண முடிஞ்சது.." - இது மற்றொருவரின் விளக்கம்.

இவ்வாறு நிறைய காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சிறிய வயதில், அறிவை பெரிய அளவில் வளர்க்காத வயதில், நாம் கண்ட இன்பத்தை, சிறுவயதைக் கடந்து, அறிவை பெறுக்கி, வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை அறிய விழையும் வயதில்,நம்மால் காண முடிகிறதா..? காண முடிகிறது என்றால் ஏன்?..காண முடிவதில்லை என்றால், ஏன் காண முடிவதில்லை?

சரி..! கருத்துப் பரிமாற்றத்திற்காக இப்பதிவை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் , கருத்துப் பகிர்தலோடு மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன். :)

Monday, September 3, 2007

மறுமை மரித்தால் பொறுமை..

வலைப்பதிவில் போடும் பதிவுகளைப் படிக்க ஆர்வம் காட்டுவதிலேயே பலரின் பொறுமை செவ்வனே விளங்குகின்றது. அதுவும், ஓரளவுக்கு நல்ல படிப்பாளிகளை சேர்த்துக் கொண்ட பதிவர்,போடும் மொக்கைப் பதிவுகள் கூட, படிப்பாளிகளின் பொறுமையைத் தான் சுட்டிக் காட்டுகிறது.ஒரளவு கணித்து வைத்திருக்கும், மனதிற்கு பிடித்த பதிவுகளை போடும் பதிவர், நடு நடுவில், "இவரா...இப்பதிவை எழுதினார்" என்று வியக்கும் வண்ணம் பதிவுகளைப் போட்டாலும், அதையும் பொறுமையாகப் படித்து, மறுமொழி எழுதும் எத்துணையோ படிப்பாளிகளை எண்ணி நான் வியந்திருக்கிறேன்.

ஆக..பொறுமை என்பது, நமக்கு பிடித்த விஷயங்க்ளில், நமக்கும் தெரியாமல், நம்மோடு இயைந்தே இருக்கிறது.ஆனால், நாம் பொறுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை அவ்வளவு சாதாரணமாக நம்மால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும், நமக்கு பொறுமை இல்லையோ என்று தான் நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மிடம் அளவற்ற பொறுமை நிறைந்து கிடக்கிறது.ஆனால், எல்லா விஷயங்களிலும் , பொறுமை காட்டமுடியாததால், நமக்கு நாம் பொறுமையாக இல்லை என்ப்தையே ஒரு தீர்வாக நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்.

சரி..பொறுமை என்பதை எதோடு சம்பந்தப் படுத்தி பார்க்கிறோம் நாம். நம்மைச் சுற்றி, நடக்கும் தீமைகளை சகித்துக் கொள்வதாகவே நாம் பொறுமையை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். நமக்கு பிடிக்காத காரியங்களை மற்றவர் செய்யும்போது பொறுமை இழக்கிறோம். ஆனால், நமக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும், பிடித்த நபர் செய்யும் போது, எங்கே இருந்து திடீரென்று நமக்கு பொறுமை வருகிறது. அப்போது என்ன நடக்கிறது. நமக்கு பிடித்த நபர், நமக்கு பிடிக்காத காரியங்களைச் செய்தாலும், அவர்களை அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான், தத்தம் குழந்தைகள் எத்தகைய பொறுமை மீறும் காரியங்களைச் செய்தாலும், பெற்றோர்களால், சுலபமாக அதை ஏற்க முடிகிறது.

குழந்தைகள, மனதிற்க்கு பிடித்தவர்களிடம் பொறுத்துப் போகிறோம் சரி...ஆனால், வெளி வட்ட நபர்கள் செய்யும் காரியங்களோ, அல்லது அவர்து போக்கோ நமக்கு பிடிக்காத பட்சத்தில், பொறுமையை பூரணமாக இழந்து விடுகிறோமே.எப்படித் தவிர்ப்பது அதை. புரிந்து கொள்ளலால் தான் சாத்தியம் அது.

ஒன்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்ப்பார்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது, என்று சிந்தித்தாலே, பொறுமை இழக்கும் காரியங்களை யார் செய்தாலும் அதற்கு எந்த விதமான முக்கியத்துவத்தையும் நாம் தராமல் பார்த்துக் கொள்ள முடியும். நாம் பொறுமை இழக்கும் சமயத்திலெல்லாம்,அவதிப் படுவோர் நாம் தான். நம் மன அமைதியை நாம் தான் கெடுத்துக் கொள்கிறோம். கோவம் கொள்கிறோம், வெறுப்படைகிறோம். இது நமக்கு இப்போது தேவை தானா என்று யோசித்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுகெல்லாம், நம் உணர்வுகளை நாம் பலியாக்குகிறோம் என்பது விளங்கும். அதோடு மட்டுமில்லாமல், பொறுமை இழத்தலினால், மிகுந்த ஏமாற்றமும், அதோடு அது நீடிக்கும் மன நிலையையும் தான் நாம் பெறுகிறோம்.

உதாரணத்திற்கு சொல்வதானால், பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, பேருந்து வர கால தாமதமாகி விட்டால், பொறுமை இழந்து தவிக்கிறோம். அப்படி பொறுமை இழப்பதினால், நடக்க கூடியது என்ன. அதனால் ஏற்படும் லாபம் என்ன.பேருந்து வந்து விடப் போகிறதா.. செல்லக் கூடிய இடத்திற்கு கால தாமதம் ஆகத்தான் செய்யும். ஆனால், பொறுமையிழப்பதால், அந்த விளைவை நாம் மாற்றி விட முடியுமா..என்பதை கண நேரம் சிந்தித்தாலே, அங்கே காத்துக் கொண்டிருக்கும் நிலையை நாம் ஏற்றுக் கொண்டு விடுவோம். அதனால், மன அமைதியும் உண்டாகும்.

மற்றவரின் செயல் கண்டு பொறுமை இழக்கும் சூழல் ஏற்படுகிறதா..அவர்கள் செய்வது அவர்களது அறியாமையினால் தான்..என்று நமக்கு நாமே விளக்கம் கொடுத்துக் கொண்டாலே போதும். பொறுமை இழ்க்க வேண்டிய அவசியம் இருக்காது. நமக்கு வேண்டியவர்கள், நமக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யும் போது, அன்பின் நிமித்தமாக பொறுமையை கையாள நாம் எப்படி பழகிக் கொள்கிறோமோ, அதே போல், நமக்கு அன்னியமானவர்களின் காரியங்களில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்களது அறியாமையினால் தான் அது நடந்தது என்று நாம் சிந்திக்கும் பட்சத்தில், நம்மால், பொறுமை இழக்காமல் எப்பவும், மன நிம்மதி பெறமுடியும்.

ப்யிற்சியின் மூலம் பொறுமை இழக்கின்ற பழக்கத்தை மெள்ள மெள்ள குறைத்துக் கொண்டுவிடலாம். ஒரு நாளில், சில நிமிடங்களாவது, எனக்கு ஒவ்வாத காரியங்கள் நிகழந்தாலும் பொறுமையாக இருப்பேன் என்று நமக்கு நாமே தீர்மானம் செய்து கொண்டால் தான், பொறுமையை பழக்கத்தில் கொண்டு வர இயலும். எது நடந்தாலும் பொறுமையாக இருக்க, சிறு சிறு விதமாக நாம் பழகக் கூடிய இப்பழக்கம் தான் துணையாக இருக்கும். காலப்போக்கில், பொறுமையாக இருப்பது பழக்கமாக ஒன்றாகி விடுவதோடு, உணர்ச்சி வயப்படாமல் எதையும் சரியான கோணத்தில் பார்கினற கலையையும் நாம் கற்றுக் கொண்டு விடலாம்.

Friday, August 24, 2007

க(ம்பன்)ண்ணதாசன் ஏமாந்தானா? ஏமாற்றினானா?



பாடல் : கண்ணதாசன்
படம் : நிழல் நிஜமாகிறது

கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு
மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ...

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

இப்பாடலில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள வரிகள் (நீல நிற வரிகள்) சரியானவை தானா? அவ்வாறு ஏன் குறிப்பிட வேண்டும். இதைப் பற்றி தங்கள் கருத்துகள் என்ன? பகிர்ந்து கொள்வோமா..

=================
"நான் மானுட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

ரத்தத்திலகம் படத்தில் தானே நடித்து, கண்ணதாசன் பாடிய வரிகள் இவை. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை " என்பதை வெறும் பாடல் வரிகளாக கொள்ள முடியவில்லை. கண்ணதாசன் ஒரு கவிஞனாக மட்டுமே பார்க்கப்படுபவன் இல்லை. திரை இசைப் பாடல்களுக்காக அவன் எழுதிய கவிதைகளை வைத்து, வெறும் திரைப்பட பாடல் கவிஞன் என்று என்னால் முத்திரைக் குத்த முடியவில்லை.

காலத்தை கடந்து நிற்கும் பாரதிக்கும் அவனது கவிதைகளுக்கும் சமமானவன் கண்ணதாசனும் அவனது படைப்புக்களும்.அவனது ஒவ்வொரு வரிகளும், அவனுடைய இயல்பையும், வாழ்க்கை குறித்து அவன் கொண்டிருக்கும் அபிப்ராயங்களையும் தெள்ளத் தெளிவாகத் தான் காட்டி வந்திருக்கின்றன. திரை ஊடகம் ,அவன் படைப்புகளை, அவனது எண்ணங்களை பாமரனிடத்தில் கொண்டு சேர்த்தன. அவனை கவியரசு கண்ணதாசனாக காண்பதை விட, வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து முத்தெடுத்த ஒரு தீர்க்கதரிசியாகத் தான் நான் காண்கிறேன்...

திரை இசைப் பாடல்கள் எழுதும் கவிஞர்கள், பொதுவாக, திரையில் அப்பாடலை பாடி நடிக்கும் பாத்திரப் படைப்பிற்கு தகுந்த வண்ணம் தான் பாடல்களை இயற்றுவார்கள். ஆனால் கண்ணதாசனைப் பொறுத்தவரையில், அவன் எழுதிய பாடல் வரிகள், பாத்திரப் படைபின் திறனை மீறி தான் கொடுக்கப ்பட்டிருக்கின்றன. இதை பல பாடல்கள் கொண்டு உணர்த்த முடியும். ஒரு குடிகாரன், சோம்பேறி, தன் சகோதரியின் சொற்ப சம்பளத்தில், தானும், தன் மனைவி , குழந்தையும் வாழும் நிலை குறித்து சிறிதும் சிந்திக்காத சுயநலவாதி பாடும் பாடலா இது...

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு....

வாழ்வின் பொருள் என்ன..நீ வந்த கதை என்ன..

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி..
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி..

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்..
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்..

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி..
உண்மை என்ன..பொய்மை என்ன..
இதில் தேன் என்ன..கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

இப்படி ஒருவன் பாடினால், அவன் தெளிவான நோக்கு உள்ளவனாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் பாத்திரப் படைப்பு , முற்றிலும் வேறு விதமாக இருந்த, அப்படத்தில், கண்ணதாசன் ஏன் இப்படி பாடலை எழுதினான். பாத்திரப் படைப்பு என்பது ,அவனைப் பொறுத்தவரை வெறும் பெயருக்குத்தான். அவனினிலிருந்து வெளிப்படும் வரிகள், எல்லாமே அவன் சிந்தனை, அவன் கருத்து, அவனால் உணரப்பட்டவை. வெகு சாதாரணமாக அவன் பாத்திரத்திற்காக கவிதை எழுதினான் என்பதை சொல்லி விட முடியாது.

சரி..இப்போது, பிரச்சனைக்குரிய பாடல் வரிகளுக்கு வருவோம். கம்பன் ஏமாந்தான்..

நீங்கள் கூறுவது போல், பாத்திரப் படைப்பிற்காக அப்பாடல் எழுதப்பட்டாலும், அப்பாடலின் வரிகள், கதாப் பாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக மட்டும் கொள்வதிற்கில்லை. பல் வேறு கோணங்களில் அவ்வரிகளை நாம் புரிந்து கொள்ளலாம். முதல் கோணம்.. ஆண்களை துச்சமென மதிக்கும் கதாநாயகியை , அவளை நேசிக்கும் கதாநாயகன், சீண்டுவது போல பாடலைப் படைத்தது. இரண்டாவது கோணம், இப்பாடலின் மூலம் கதாநாயகன், ரசிப்பு -(அம்பு விழி என்று...), ஏக்கம் -(தீபத்தின் ஜோதியில்.....) ,அறிவுரை ( ஆத்திரம் என்பது...) போன்ற தன் பாவங்களை (expression)வெளிப்படுத்துவதாக எழுதப் பட்டிருக்கலாம்.

மூன்றாவது கோணம், கவிஞன் குறிப்பேற்றுதலை அவ்வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். என் கேள்வி இங்கு தான் ஆரம்பமாகிறது. " ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாமஅடுப்படிவரை தானே"

பாடல் பிறந்த வருடம் 1978.. அப்போதைய நிலையில் பெண்களின் நிலை , கோபத்தை அடுப்படி பாத்திரங்களை "ணங் " என்று வைத்து காண்பிப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது. பெண்களின் இயலாமையும், அவர்களை அவர்களே உணரமால் போனதையும் இவ்வரிகள் சித்தரிப்பதாக எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்த வரிகள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. " ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே...." எவ்வகையான ஆண் என்றாலும், பெண்ணே நீ அவனுக்கு அடங்கி நட என்று சொல்லவில்லை அவ்வரிகள்

துணைவன் ஆதிக்க நாயகனாக - எல்லா விதத்திலும் தலை சிறந்தவனாக,விளங்குமிடத்து " அடங்குதல் முறை தானே - அவனுள் ஐக்கியமாவது முறையானது தானே என்று பொருள் கொள்ளும் விதமாகவும் இவ்வரிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில், கதாநாயகன், கதாநாயகியின் அன்பு வேண்டி தான் அப்பாடலை பாடுகிறான். பாடலின் சுவையை கூட்டுவதற்காக, "கம்பன் ஏமாந்தான்.." என்று பாடலை ஆரம்பிப்பது போல் பாடல் அமைக்கப ்பட்டிருக்கிறது.

கம்பன் ஏமாந்து தான் போனான், கன்னியரை ஒரு மலர் என்று கம்பன் வாழ்ந்த காலத்தில் பார்த்ததை, கண்ணதாசன் அவன் காலத்தில், கம்பன் ஏமாந்தான் என்று பாடிச் சென்று விட்டான். இன்றைய காலகட்டத்தில், கண்ணதாசனும் ஏமாந்து தான் போனான் என்று கூறும் அளவுக்கு ஆதிக்க நாயகனுக்கு சமமான , ஆதிக்க நாயகிகள் அவதரித்து விட்டனரே...ஆம்! கண்ணதாசன் ஏமாந்து தான் போனான். ஐக்கியமாகத் தான் ஆள் இல்லை இங்கே..

Tuesday, August 21, 2007

அடுத்த நொடியில்..அற்புதம் !

"யார் மனசுல யாரு...அவருக்கென்ன பேரு..","கலக்கப் போவது யாரு", "லொள்ளு சபா",சமீபத்தில் விஜய் டிவியில் இடம் பெறும் நிகழ்ச்சிகளைன் தலைப்புகள் தான் இவை. சொல்லப் போனால், நிறைய ரசிகர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கிறார்கள். வருடக் கணக்கில்,இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப ்படுகின்றன.தொய்வு இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் ,வெற்றி அடைய காரணங்களை ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இப்பதிவு.

(வேதாந்தத்தையே படித்துப் போன மனங்கள், இது போன்ற பதிவினைப் பார்த்தாவது மனம் மகிழட்்டுமே :P)

மீடியா என்றழைக்கப்படுகின்ற ஊடகங்களின் தாக்கம், கிட்டத்தட்ட ஒரு 10 வருடங்களாக மிகப் பெரிய அளவில் தான் இருந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால், தமிழகம் முழுதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்க்க ஆர்ம்பித்தார்கள். வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு இரு சினிமா- மதியம் பிராந்திய மொழித்திரைப்படம்- மாலை தமிழ் படம் என்று சென்னைத் தொலைக் காட்சி ஒளிபரப்ப, அதை வைத்த கண் வாங்காமல், ஆஆ...என்று பார்த்த மக்களிடத்தில் அப்போதைக்கு பெரிய எதிர்ப்பார்ப்புகள் என்று எதுவும் ஊடகங்களின் மேல் இல்லை. வாரம் ஒரு படமும், அரை மணி நேர திரை இசைப் பாடல் காட்சிகளுமே, மிகுந்த திருப்தியாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.

ஆனால், நாளடைவில் பல அலைவரிசைகளைக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்ததும், இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படமோ அல்லது திரை இசைப் பாடல்களோ, மிக சல்லிசாகப் போய்விட்டது. முதலில் எப்போதோ ஒரு படம் என்று ஆரம்பித்த போது, இருந்த ஆர்வம், இப்போது படங்கள் பார்ப்பது எப்பவும் இயன்ற ஒன்று தான் என்ற அளவிலே, ஆர்வம் என்பது சற்று குறைந்து தான் விட்டது. Trend என்று சொல்லப்படும் போக்கு இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. முன்பு அவர்கள் என்ன கொடுத்தார்களோ, அதை பார்க்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருந்தது, இப்போதோ, மக்களுக்கு என்ன ஆர்வமோ அதை தான் ஊடகங்கள் தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகியிருக்கிறது. இது ஒரு வகையில் ஆரோக்கியமே. பார்ப்போர் வட்டம் பெரிதாக இருப்பதால், பல தனியார் தொலைக் காட்ச்சிகளின் போட்டாப் போட்டிக்கிடையில், யாரை எந்த பக்கம் இழுத்தால், விளம்பரதாரகளை அதிகம் வரவழைக்க முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு மக்களிடம் நிலவிய சீரியல் தொடர்களை தவறாமல் பார்க்கும் மோகம் இப்போது குறைந்து விட்டது. அதற்கு காரணம், அப்போது, போட்டிகென்று சம நிலையில், சன் டிவிக்கு நிகராக எந்த டிவியும் இல்லாத நிலை. எனவே, அவர்கள் பெரும் பாலும், ஒளிபரப்பு செய்த் சீரியல் தொடர்களையே மக்கள் விரும்பிப் பார்த்தனர்.

ஆனால் சமீப காலமாக, பல் வேறு வித்ங்களில் சீரியல் தொடரை விட சுவாரஸியம் தரும் நிகழ்ச்சிகளை மற்ற தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டதால், மக்களின் ரசனை அதற்கு தாவி விட்டது. இதுவும் மிக ஆரோக்கியமானதே. மக்களை எப்படியாவது ஒரு அரை மணி நேரம் உட்கார வைத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் புதுப் புது உத்திகளை கையாள்கிறார்கள். இதனால், புதிதான எண்ணங்களுக்கும், இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனுக்கும் நல்ல தீனி கிடைத்திருக்கிறது.

விளம்பரதாரர்கள் கூட, படைப்புத்திறனைக் காண்பித்தால் தான், மக்களை விளம்பர இடைவேளைகளில் கூட உட்கார வைக்க முடியும் என்று உணர்ந்து, விளம்பரப் படங்களை எடுத்து வருகின்றனர். ஆகவே,ஊடகங்கள் கையில் மக்கள் என்ற நிலை மாறி, மக்களுக்காக ஊடகம் என்ற ஆரோக்கிய நிலை வந்து விட்டது. எதன் மூலம் , எந்த பிரிவினரை கவரலாம் என்று புதிய புதிய எண்ண ஓட்டங்களுடன் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க பல குழுமங்கள் கூடி, கூட்டு வேலை செய்து, ஒரு நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர்

சமீபத்தில் நான் ரசித்த இரு விளம்பர படங்களை இங்கு தர விழைகிறேன். மிக அற்புதமான படைப்புத் திறனை இவ்விரு படங்களும் எனக்கு உணர்த்தின. சிலாகித்து தான் போனேன். :






இப்பதிவின் மூலம் நான் தெரிவிக்கவிருந்த கருத்து இது தான்...

எப்பவும் ஒரே மாதிரி விருப்பங்களும், சிந்தனைகளும் இருப்பதில்லை. கால ஓட்டத்திற்கு தக்ந்தபடி, புதிய பரிமாணங்களோடு வரும் எணணங்களும், சிந்தனைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. சிந்தனைகள் புதிதாக இருக்க, செயல்பாடுகளும் புதுமை வாய்ந்ததாகவே இருக்கப்படும். இன்று இருப்பது, நாளை இருப்பதில்லை. நாளை இருப்பது, வரும் காலத்தில் நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. அடுத்த நொடி காத்திருக்கும் ஆச்சர்யங்களுக்காக தான் மனித மனம். அடுத்த நொடி என்னவாகும் என்ற நினைவு கொடுக்கும் ஆனந்தம் தான் நம்மை இந்த நொடியில் வாழ் வைத்துக் கொண்டிருக்கிறது.

Sunday, August 19, 2007

சுதந்திரம் ஒரு வேள்வியே !

சுதந்திரம்...இச்சொல் மிகவும் பிரபலமான சொல். ஆனால், இச்சொல்லை நாம் உச்சரிக்கும் போதே நம் நாடு சுதந்திரம் அடைந்து ...என்று ஆரம்பிக்கும் ஏதோ ஒரு செய்தி தான் இந்தியர்களான நம் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வரும். நம் நாடு ஆங்கிலேயரின்ன் கீழ் அடிமைப்பட்டுக் க்டந்து, பல் வேறு தடைகளைத் தாண்டி, பல் வேறு மனிதர்களின் போராட்டத்தினால் பெறப்பட்டதே இச் சுதந்திரம். ஏன் அவ்வாறு சிரமப்பட்டாது, சுதந்திரம் பெற வேண்டும்? என்ன காரணம்?

சுதந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது? சுதந்திரம் என்பதை எப்படி வரையறுப்பது? சுதந்திரம் என்பது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே, யாரையும் சாராமல், தாமே தம் திறன் மூலம் செயல்படுவது என்று கொள்ளலாமா.அதனால் தான் இந்தியர்களான நாம், நம் நாடு, நம் மொழி, நம் பேச்சு, நம் எழுத்து என்று அனைத்திற்குமே சுதந்திரம் வேண்டும் என்ற காரணத்தினால், ஆங்கிலேயனிடமிருந்து போராடி நம் உரிமையைப் பெற்றோம்.

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது கருத்து, மொழி, எழுத்து, குடிஉரிமை என்று பல் வேறு வடிவமெடுத்து, அதை செயல்பாட்டிலும் கொண்டு வர ஏதுவாக, சட்டமும் , ச்முதாயமும் பல் வேறு கோணங்களில் சிந்தித்திது செயல்படுகின்றன. இவையெல்லாம் நாட்டிற்கும், அதன் மக்களுக்கும்.

தனி மனித சுதந்திரம்?? இதனைப் பற்றி பொதுவான அபிப்ராயம் என்ன எனறு பார்த்தால், நாடும், நாடு சார்ந்த சட்டங்களுமே தனி மனிதனுக்கும் பொறுந்தும் என்ற அளவில் தான் சுதந்திரம் என்பது வரையறுக்கப்படுகிறது. ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது என்ன. இவை மட்டும் தானா. இவையும் தான், ஆனால் இது வெளித்தோற்றத்திற்க்குண்டான சுதந்திர காற்றை சுவாசிக்க பயன்படும் கோட்பாடுகள். மனிதனுக்குள்ளே சுதந்திர தன்மை என்று இருக்கிறதே, அதைப் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா?

ஒரு தனி மனிதனின் உண்மையான சுதந்திரம் என்பது, அவன் இஷ்டப்படுபவைகளை எத்தடையும் இல்லாமால், யாரையும் சாராமல், சுயமாக சிந்தித்து சரியாக செய்வதேயாகும். இவ்வாறு சுதந்திரத்தை நாடும் ஒருவன், தன்னை, தன் சுயத்தை (self)
முன்னேற்றும் வகையில் தன்னைப் பண்படுத்திக் கொள்வதில் தான் அவனின் முழு சுதந்திரமும் அடங்கியிருக்கிறது. பண்படுத்திக் கொளவது என்றால் எப்படி?

தன்னை பாதிக்கும் எவ்வித பொருளிலும், செயலிலிருந்தும் விலகிச் சென்று, தன்னைக் காத்துக் கொள்வதும், எதிலும் அதீத பற்றுக் கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருப்பதும், எவ்வித கலாச்சாரத்திலும் அதீத ஈடுப்பாட்டோடும், அவ்வகையான ஈடுபாட்டினால், திறந்த மனத்தன்மை இழக்காமல் இருப்பதும்,மனதை பாதிக்கும் இறந்த கால நிகழ்வுகளை சுமக்காமல், கவலையை களைந்தெடுத்து வாழ்வதும்,எவ்வித உணர்வு பூர்வமான விஷயத்திலும் தன்னையே மூழ்கடித்துக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி, தானே வெளி வர முடியாத வண்ணம் சுமுதாய சிந்தனைகளையோ, பழக்க வழக்கங்களையோ, சம்பிரதாயங்களையோ வகுத்துக் கொள்ளாமல், தானே தன்னை எவன் ஒருவன் ஆள்கிறானோ அவனே பூரண சுதந்திரத் தன்மை வாய்ந்தவனாகக் கொள்ளப்படுவான்.

இவற்றையெல்லாம் செய்த்து முடிக்க மன உறுதி அதிகம் தேவைப்படுகிறது. தன்னை "மிகவும் சுதந்திரமானவன்" என்று அறிவித்துக் கொள்ள மிக அதிகமான மன திடம் தேவைப்படுகிறது. மனதிடத்தை வளர்த்தாலே, சுதந்திரக் காற்றை அவன் சுவாசிக்கும் நாள் அவனுக்கு வெகு தூரத்தில் இல்லை என்று கொள்ளலாம்.

தன்னைத் தானே அறிதல் ஒரு சுவாரசியம் என்றால், பூரண சுதந்திரம் அனுபவித்தல் அதை விட சுவாரசியமான அனுபவம். ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை ஏராளம். இத்துணை காரியம் செய்து பண்பட வேண்டி இருக்கிறதே. தாகம் உள்ளவர்க்கு வேள்வி கூட சர்வ சாதாரணமே..

Thursday, August 16, 2007

கடமை ஒரு மடமை ...!

த்தலைப்பு வைக்கும் போது எனக்கு "வீராச்சாமி- இராஜேந்தர்" தான் நினைவுக்கு வந்தார..் ha..ha. "தங்கச்சி ..! இந்த அண்ணணோட கடமையில இருந்து என்னிக்குமே நான் தவறினதில்லமா...மா..மா தட்டிப் பார்தேன் கொட்டாங்கிச்சி..தாளம் வந்தது பாட்ட வச்சி..." :) Ha..Ha..

கடமை ! இந்த சொல்லை எத்துணை தவறாக புரிந்து கொள்ள முடியுமோ, அத்துணை தவறாகவே அதை பற்றி வாழ்ந்தும் விடுகிறோம்.கடமை என்பதின் முழு அர்ததம் நமக்கு தெரிந்து தான், நாம் அதை ஆதரிக்கிறோமா..என்ற சந்தேகம் எனக்கு எப்பவுமே உண்டு.அடிக்கடி நாம் கேள்வியுறும் வாக்கியம் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு. போதாததற்கு என்று பெற்றோரும், அவர்களிடம் வளர்வோரும் " என் கடமையை தான் செய்கிறேன்" என்று வசனங்களை வேறு அள்ளி விடுகிறார்கள்.

கடமை என்பது என்ன? அதன் சாராம்சம் என்ன என்பதை உணராமலேயே அந்த வார்த்தை உபயோக்கிப் படுகிறதா? இல்லை, கடமை மட்டுமே உணர்ந்து, அவ்வார்த்தை சொல்லப்படுகிறதா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இதை வெறும் வார்த்ைதயாக மட்டுமே உபயோக்கிக்த் தெரிந்து இருக்கிறதே என்பதே என் வருத்தம்.

சரி..இவ்வளவு பீடிகை எதற்கு? நேராகவே சொல்லி விடுகிறேனே. ஆனால் சொல்லி முடித்த பின் எத்துணை பேரின் உறவு முறையில் குழப்பங்கள் வரும் என்பதை சொல்லி விடமுடியாத. குழப்பங்கள் வரலாம்....இல்லை இதெல்லாமே முன்பே தெரிந்ததது தானே என்ற எண்ணமும் வரலாம். முதல் முறையாக இது பற்றி யோசித்த போது, எனக்கு குழப்பமே நேரிட்டது.அதனால் தான் இந்த எச்சரிக்கை மணி.

முதலில் கடமை என்பது எது சம்பந்தமாக சொல்லப்பட்ட வார்த்தையாக இருக்கக்கூடும் என்று பார்த்தால், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட, அல்லது தானே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு செயலில் இருந்து மாறாமல், வழுவாமல், அச்செயலை செய்து முடித்தல் சாலச் சிறந்தது, என்ற பொருள் தரும் வண்ணமே கடமை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். நாம் செய்யும் வேலையில் ஒரு வித பிடித்தமும், வேலையிலிருந்து நழுவாமல், நம்மை அவ்வேலையோடு பிணைத்து, அதை செவ்வனே முடிக்கும் எண்ணத்தில் தான் கடமை என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.ஆனால், அத்தகைய தொனியில் ஆரம்பித்து, கடமை என்பதை வேலை என்பதற்கு மட்டும் பாராமல், நம்மை சுற்றி இருக்கும் உறவு முறைகளிலும் நுழைத்து விட்டோம்.

பல குடும்பங்களில் நாம் கேட்டிருக்கக்கூடும். பெத்த கடமைன்னு ஒண்ணு இருக்குங்களே, அத நிறவேத்தணுமே என்று தான் தம் பொறுப்பை உணர்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு சிலர் பேசுவதுண்டு. அவ்வாறு பேசுபவர்களை பற்றிய நம் அபிப்ராயம் எப்படி இருக்கும். எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராக இவர் இருக்கிறார். தன் கடமையை நன்கு உணர்ந்து செயல்படுகிறாறே என்ற பாராட்டுகள் வேறு அவருக்கு குவியும். போதாததற்கு அவர் தம் மக்களும், வளர்த்த கடன் என்பதற்காகவே நான் அவர் சொல்லும்படி செயல்படுகிறேன் என்று மார்தட்டி பேச விழைகிறார்கள். இவர்கள் இருவரும் செய்யும் தவறு ஒன்றே.

கடமை என்பதை நாம் செய்யும் அலுவல் பணியிலும், நம் திறன் அறிந்து ஒப்படைக்கப்பட்ட பணியிலும் கடைபிடிக்காமல், தத்தம் உறவு முறைகளிலும்,கடமை என்பதை நுழைத்து உறவு முறைகளுக்குள் பாசம் என்பதை கொச்சைப்படுத்தும் போக்கே நடைப் பெற்றிருக்கிறது.

ஒருவனின் குடும்பம் எவ்வாறு உண்டாகிறது.அன்பினாலும், பண்பினாலும் பிணைக்கப்பட்டு, பாசமும் நேசமும் முன்னிலை வகிக்கும் வண்ணமே ,ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தை உண்டாக்குகிறான் அப்படி உருவாக்கப்பட்ட குடும்பத்தில் பிறக்கும் மழலைகளுக்கும் அதே பாசம், நேசம் என்பதௌ போய் சேரும் வண்ணம் தான் குடும்ப சூழலானது இருக்க வேண்டும். அப்படியிருக்க, எங்கே அங்கு கடமை என்பது நுழைக்கப்படுகிறது. அங்கே கடமை என்பதன் அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்தால், உண்மையாக ஒரு ஒரு குடும்பமும் அன்பினால் உருவாக்ப்பட்ட்டதல்ல, கடமையினாலே உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.

நம்மால் இதை ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா? எப்போது அன்பே பிரதானமாக கொள்ளப்பட்டு ஒரு குடும்பம் இல்லையோ, அங்கு தான் கடமை என்ற சொல்லுக்கு வழி பிறக்கும். அன்பு இருக்கும் இடத்தில் கடமை வாசம் செய்வதில்லை. அதே போல் கடமை இருக்கும் இடத்தில் அன்பு மலர்வதிற்கில்லை. அதனால் தான் காதல் திருமணங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன.

ஒரு நல்ல மகனாக இருந்து, தந்தை தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றும்படி அவர்கள் சொன்ன பெண்ணை திருமணம் முடித்து, அங்கும், ஒரு கடமை தவறாத கணவனாக நடந்து, பெற்றோரின் கடன் பிள்ளை பேறே என்று குழந்தைகளைப் பெற்று , அதே கடமைகளை தம் வாரிசுகளுக்கும் சொல்லித் தந்து தன் வாழ்க்கை கடனை முடித்தவனிடத்தில் எங்கு அன்பு என்பது மலர்ந்திருக்கிறது.அன்பு என்ற பேச்சுக்கே இடம் ஏது?.

அன்பை உணராதவர் தாம் அன்பை எதிர்க்கக் கூடும். காதல் திருமணங்களையோ அல்லது காதலிப்பதையோ எதிர்ப்பவர்கள், அன்பு என்பதை வாழ்வில் பார்த்திராதவர்களாகவே இருக்கக்கூடும். அன்பே பிராதனமாக கொண்டு வாழ்வை அமைத்து கொள்பவரால் மற்றவரின் அன்பு, விருப்பம், பாசம், அமைதி, ஆவேசம், கோவம் ஆகிய அனைத்தையுமே சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

கடமை என்பதை தாம் செய்யும் வேலையோடு சேர்த்து பார்க்க வேண்டுமே தவிர, குடும்ப உறவுகளுக்குள் அதை கொண்டாடுவது, அன்பை உணராமல், கடனை மட்டும் உணர்ந்தவரின் வாழ்வுக்குத் தான் ஒப்பாகிறது.

தாங்கள் எவ்விதம் :)

Saturday, August 11, 2007

மன அழுத்தம் எதனால்.....?

மன அழுத்தத்தின(Stress --> Depression)் எல்லை என்பதை எவ்வாறு கொள்வது.எப்படி அது ஒருவருக்கொருவர் வேற்படுகிறது? உங்கள் அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

*********

மன அழுத்தத்தை சந்தித்தபொழுது, நான் வேறு எதுவாகவும் இல்லை.மன அழுத்தமாக மட்டுமே இருந்தேன். ஆம்! முதல் முறையாக மன அழுத்தம் எனக்குள் வந்து போனது.

வந்ததது..போனது..

எவ்வித சிகிச்சையினாலோ, அல்லது எந்த வித தெரபி முறைகளாலோ, மன அழுத்தம் விலகவில்லை. மன அழுத்தம் எவ்வாறு உண்டானதோ, அதே போல் தானாக அது விலகி விட்டது. அது தான் அதன் தன்மையும் கூட.ஆனால், இது ஒருவருக்கொருவர் எவ்வளவு சீக்கிரம் விடை கொடுக்கும் என்பது தான்் நிச்சயமாக வேறுபடுகிறது.சிலருக்கு சில நாட்கள், சிலருக்கு பல மாதங்கள்.மன அழுத்ததிலிருந்து விடை பெற வேண்டும் என்ற எண்ணமே, கால அளவை வேறுபடுத்துகிறது.

எண்ணங்களின் ஓட்டமே, மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.அதே எண்ண ஓட்டமே, மன அழுத்தத்தை சரி செய்து விடுகிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு அது வந்து விட்டதே என்று, அதை சரி செய்து கொள்ள பல் வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுதலும், தன்னால் இயலாத நிலை தனக்கு வந்து விட்டதாகவும், அதனை எப்படி சரி செய்து கொள்வேன் என்ற கவலைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் , நாமே நம் மன அழுத்தத்திற்கு காரணம், அதே போல் நாமே நம் மன அழுத்தத்தையும் சரி செய்து கொண்டு விடலாம்.

ஒரு விஷயத்தை இந்த மன அழுத்தம் காரணமாக நன்கு புரிந்து கொண்டேன். சந்தோஷம் என்பது ஒரு தனி அடுக்ககாகவே நம்மில் இருக்கிறது. அதனை மறைக்கும் விதத்தில் நாம் தான் அது தெரியாத வண்ணம், துக்கம் கொடுக்கும், கவலைகளையும், எண்ணங்களையும் அதன் மேல் பூச்சாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும், கவலையும், துக்கமும் நம்மை ஆட்கொள்ள்வதில்லை. எப்பவும் நம்மிடையே இருப்பது, நம்மை திருப்தியுற செய்யும் சந்தோஷ எண்ணங்களே. அதன் மூலமே நம் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இடை இடையே நம் கவலைகளும், ஆழ்ந்த துக்கத்தில் மனதை செலுத்தும் தன்மையுமே, அந்த சந்தோஷத்தை மறைத்து, இயல்புக்கு மாறான அழுத்தத்தை மனதிற்கு தருகிறது. அதன் விளைவே மன அழுத்தம்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மனதை நாம் நினைத்தால் வெளியே கொண்டு வர இயலும். ஆனால், நம்மில் பலரும், தன் மன அழுத்தத்திற்கு காரணம் தாம் தான் என்பதை உணராமல், மன அழுத்தம் நம் எண்ணங்களினால் தான் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், அந்த மன அழுத்த உணர்வானது சிலருக்கு சில மாதங்கள் கூட அப்படியே இருந்து விடுகிறது.


தெரபிகளில், இதற்கு சிகிச்சை என்று கூறினால், நன்கு தூங்க வைக்கத்தான் மருந்துகள் தரப்படுகிறது. தூக்கம், இயல்பு நிலை மறக்கச் செய்யும். தொடர்ந்து பல நாட்கள், இயல்பு நிலை மறந்து போனால், தானாக மன அழுத்தத்திலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் வெளி வந்து விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே தூக்கம் தரும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந் நிலை எனக்கு வேண்டாம், என்ற எண்ணத்தோடு, மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உந்துதலோடு இருந்தால், சுலபமாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து விடலாம். நாம் தான் நம்மை வழி நடத்துவது. நாமே நம் எண்ணங்களை வடிவமைப்பது. நாம் நினைத்தால் மன அழுத்தத்தை நமக்குள் வர வைக்கலாம். நாம் நினைத்தால், அவ்வழுத்தத்திலுருந்து சுலபமாக வெளி வந்து விடலாம். நம் மனதை எவ்வாறு நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமோ, அவ்வாறே, நாம் நம் மனதிற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை கணக்கிட்டு கொள்ள முடியும்.

மனதை சீரிய முறையில் பழக்கப்படுத்த,உள் நோக்கும் தன்மையே (perception) காரணம். நாம் பிறக்கும் போது, உள் நோக்கும் தன்மை என்பதே இல்லாமல் தான் பிறக்கிறோம். ஆனால், நாளாக நாளாக, நம்மைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தாலே, உள் நோக்கும் தன்மையை நாம் பெற்று விடலாம். நாம் வாழும் உலகிலிருந்து, நம்மை நாம் வேறு படுத்திக் காண்பதே இல்லை. அப்படி வேறு படுத்தி கண்டால் தான், நம்மால் உள் நோக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம் என்பது ஒரு மன நோய் அல்ல. அது சமுதாயத்தை சீரழிக்கும் நோயும் அல்ல. அது ஒரு வித மன நிலை. அவ்வளவே. அதற்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. மன நிலையை மட்டும் நாமே சரி செய்து கொள்ளும் கலை தெரிந்தாலே, நம்மால் மன அழுத்த நிலையை மாற்றிக் கொள்ள முடியும். அறிவை(Mind) விருத்தி செய்து கொள்ளப் பழகும் நாம், நம் சுயத்தை (Self) விருத்தி செய்து கொள்ளப் பழகினாலே, இது போன்ற மனம் சம்பந்தப்பட்ட நிலைக்கு தீர்வினை சுலபமாக காண முடியும்.

மன அழுத்தம் கொண்டோர், தம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியே மன அழுத்தம் ஏற்ப்பட்டாலும், அதிலிருந்து நம்மை நாமே உடனடியாக விடுவித்துக் கொள்ளவும் முடியும்.

Disorder (சீரிய தன்மையற்ற) என்று சொல்லப்படும் தன்மை கூட, ஒருவரின் மன நிலையைப் பொறுத்து தான் வீரியம் மிகுந்ததாக இருக்கக் கூடும்.Disorder னால் பாதிக்கப்பட்டவரின் மன நிலை, அச்சீரிய தன்மையற்றதை விட உறுதியாக இருக்குமானால், அந்த disorder அவரை ஒன்றுமே செய்ய இயலாது.

"We don’t see things as they are, we see them as we are." எனவே இருப்பதை இருப்பதாகவே நாம் கொண்டாலே, இந்த மன அழுத்தம் போன்ற நிலைக்கு நமக்கு நாமே பதிலையும், முடிவையும் தேடிக்க் கொள்ள இயலும்.

Friday, August 3, 2007

இறப்பை வரவேற்க்கத் தயாராவோமா? (தொடர்ச்சி)

எப்போது என்ன ஆகும்? என்ற எண்ணத்தில் அல்லாது, எது நடந்தாலும் நடக்கட்டுமே என்ற எண்ணம் தான் நம்மை நம்பிக்கையோடு வாழ வைத்துக் கொண்டிருப்பது.ஆனால் அந்த நம்பிக்கையை தான் நாம் உறுதியோடு பிடித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதை, நம்மால் விழிப்புணர்வோடு கவனிக்கத் தெரியவில்லை.

மாடிப்படிகளில்,மேலிருந்து கீழே இறங்கும் போது, இறங்கும் விழிப்புண்ர்வு இல்லாமல், அதி வேகமாக படிகளில், சட் என்று இறங்கும் போது, நாம் சுலபமாக படியை கடந்து விட முடிகிறது. ஆனால், இவ்வளவு படிகளை, ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பார்த்து பார்த்து காலடியை எடுத்து வைத்து கட்ந்தோமேயானால் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதே போல தான் வாழ்வும். மிக அதிக விழிப்புணர்வு, நம் வாழ்வை தடுமாற்றத்தான் செய்கிறது.

உயிர் தான் பிரதானம். உடல் தான் பிரதானம். அதனால் தான் அதற்கு பங்கம் வருகிறது என்றால், யாராலும் சகித்துக் கொள்ளமுடிவதில்லை. சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை.என்னடா..இது. இறப்பை வரவேற்கலாமா..என்று கேள்வி கேட்டவ்ர், சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை என்று சொல்கிறார் என்று கேட்கிறீர்களா...மனதில் நிழலோடும் எந்த ஒரு உணர்வையும், சரி, தவறு என்று யாராலும் பாகுபடுத்தி பார்த்து விட முடியாது. பயமாக இருக்கிறது என்றால், பயம் ஏன் என்ற கேள்வி அங்கு அர்த்தமில்லாதது. ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் "it happens" அதற்கு மேல் பயத்தை பற்றி விவாதிக்கவோ, அல்லது அது கூடாது என்று சொல்வதிலோ அர்த்தமேயில்லை.

ஆனாலும், இறப்பு என்பது நாம் வாழும் போதே நம்மை ஆட்டி வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் பட்சத்தில், விதியை மதியால் வெல்லாலாம் என்ற நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி தான் இறப்பை வரவேற்கலாமா? என்ற கேள்வி.பிறப்பை தடுக்க பல வழிகளை நாம் கண்டு பிடித்து விட்டோம்.ஆனால், இறப்பு? மனிதனுக்கு ஒரு பெரிய ச்வாலைத் தான் இயற்கை விடுத்துள்ளது. மழை வரும் போது, அதிலிருந்து நனையாமலிருக்க குடையை கண்டு பிடிக்கத்தான் முடிந்ததே தவிர, மழை வருதலை மனிதனால் தடுக்க முடிந்ததா? அதே போலத்தான், இறப்பை சவாலாக வைத்துள்ள இயற்கை முன், அவ்விறப்பையும், எதிர் கொள்ள தயாராகி விட்டேன் என்ற சவாலைத் தான் மனிதனால் வைக்க முடிந்திருக்கிறது. எவ்வாறு இதனை எதிர் நோக்குவது என்பதை ஒரு சிறு உண்மைச் சம்பவம் மூலமாக சொல்ல விருப்பப் ப்டுகிறேன்.

அம்மனிதருக்கு 46 வயது. இந்தியாவின், ஒரு புகழ் பெற்ற கம்பெனியின், மிக உயர்ந்த பதவியில் , சிற்ப்பாக அவர் பணியாற்றி வந்தார். தனது கடின உழைப்பால், சிறிய வயதிலேயே, முன்னுக்கு வந்தவர் அவர். பார்க்காத நபர்களில்லை, போகாத நாடுகளில்லை. மிகவும் பிரமிக்கத் தகுந்த வண்ணம் தான் அவர் வளர்ச்சி இருந்து வந்தது.தம் மனைவி, இரண்டு குழந்தைகளோடு ராஜபோகத்தோடு தான் வாழ்ந்து வந்தார். சமீத்தில், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார், ஒரு பிரபல மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு, சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், இயற்கைக்கு முன், மனித முயற்சி எம்மாத்திரம், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு நாள் மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த உறவினரிடம், அவர் கூறியது..

" வாழ்கையில எதை எதையோ சாதிக்கணும்னு நினைச்சேன்..சாதிச்சேன்.

நிறைய பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேன் சம்பாதிச்சேன்...

ஆனால் அப்பணத்தைக் கொண்டு அப்பபோ வாழணும்னு எனக்குத் தெரியலை..அப்புறமா பார்த்துக்கலாமனு்..என்னோட சந்தோஷத்தை தள்ளிப் போட்டுடேன்...

இவ்வளவு, பணமும், புகழும் சம்பாதிச்சு பலன் என்ன, அதை எல்லாம் மனைவி, மக்களோடு சேர்ந்து அனுபவிக்க தவறிட்டேன்.இன்னொரு தடவை வாழ எனக்கு வாய்பிருக்காதான்னு தான் மனசு ஏங்குது.

நான் செஞ்ச தப்பை நீயும் பண்ணிடாதேப்பா....பணம் தான் முக்கியம்னு இருக்கிற வாழ்க்கையை கோட்டை விட்டவன்பா நான்.." - என்று அவர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி .......

இப்போது நான் கூறிய நபர் உயிரோடு இல்லை.ஆனால், வாழவேண்டும் என்ற ஆசையிலேயே தான் அவர் உயிர் பிரிந்தது.நம்மை வழி நடத்துவது நம் நம்பிக்கை மட்டுமல்ல, நம் எண்ணங்கள், மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால், நம்மை மகிழ்விக்கும் எண்ணங்களே நம்மை வாழ்விக்கினறன. வாழும் ஆசையை அவைகளே தான், தோற்றுவிக்கின்றன, ஊக்குவிக்கின்றன. அவ்வெண்ணங்களைக் குலைக்காமல், அவைகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எப்போது, நம்மால் இவற்றை நிறைவேற்ற இயலும்?

இறப்பு நமக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தும், வாழும் கலை தெரியாத பட்சத்தில், நிறைவேறாத ஆசைகளினாலும்,மகிழ்சியை எவ்வாறு தேடிக் கொள்வது என்று புரியாத காரணத்தினாலும் தான் , வாழ்தலில் திருப்தி காணாமல், மனித மனம், இன்னும் சிறிது காலமிருந்தால்,நன்றாக வாழ்வேனே.... என்று கடைசி தருவாயில் துடிக்க ஆரம்பிக்கிறது.அதனால் தான் இறப்பு நமக்கு வேண்டாத நிகழ்வாக தெரிகிறது. தவிர்க்க முடியாது என்றும் தெரிகிறது. ஆனால், மனம் அதற்கு தயாராவதற்கு மறுக்கிறது.

எப்போது, மனத்தை நாம் திருப்தியுற செய்கிறோமோ, அப்போதே, நம் இறப்பை நாம் வரவேறக்்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.திருப்தி அடைய வைக்க எனக்குத் தெரிந்த மூன்று தாரக மந்திரத்தை சொல்ல விழைகிறேன்.

1. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்ந்தேன்

2. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்கிறேன்.

3. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழுவேன்.


என்று ஒரு ஒரு நிமிடத்திலும் நம் மனமானது சந்தோஷப்படும் வகையில் வாழ்கையை நாம் வாழ ஆரம்பித்தாலே, பூரண திருப்தி வெகு சுலபமாக நமக்கு கிடைத்து விடும். ஆனால் அதுஅவ்வளவு சுலபமல்ல. அதற்கு வாழும் கலையை பிரயத்தனமாக கற்க வேண்டியதாகிறது. ஆனால், வாழ்கையின்
கடைசி நிமிடமாக , நாம் வாழும் ஒரு ஒரு நிமிடத்தையும் கொண்டாலே, நமக்கு அக்கலையை கற்கும் பிரயத்தனம் கூட சுலபமாகி விடும்.

நாம் விருப்பப் படும் , நம்மால் இயன்றதாக இருக்கும், நமக்கு சந்தோஷம் தரும், எதையும் உடனுக்குடனே செய்து ,முழு திருப்தி அடையும் கலை தெரிந்தால்..

"காலா..வாடா...உன்னை சிறு புல்லென மி(ம)திக்கிறேன்.." - என்று சீற்றம் கொண்டு பாடினானே பாரதி..அவன் பாடலுக்குண்டான முழு அர்த்தமும் விளங்கும்.

Tuesday, July 31, 2007

இறப்பை வரவேற்க்கத் தயாராவோமா?

தலைப்பே ஒரு விதமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? என்ன! தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டாள் என்ற முணுமுணுப்பும் என் காதில் விழுகிறது :) என்னைப் பொறுத்தவரையில், வாழ்க்கையும், தத்துவமும் தனித் தனிச் சொற்கள் அல்ல. தத்துவத்தை தொடாமல், வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க முடியாது. புரியாத ஒன்றைத் தான் தத்துவம் என்ற பொருளில் நாம் காணுகிறோம். ஆனால், அதே தத்துவத்தை தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல்.

இறப்பை வரவேற்பதா? எப்படி சாத்தியம் இது? என்ற கேள்வி ஒவ்வொரு மனதிலும் எழக் கூடும். சற்றுக் கடினம் தான். அவ்வளவு எளிதாக ஜீரணம் செய்து கொள்ள முடியாத ஒன்று தான் இறப்பு என்பது. அன்றாட வாழ்வில் பிறப்பு என்பது எவ்வளவு சாதாரணமோ, அத்துணை சாதாரணம் தான் இறப்பும். இது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால், அந்த எதார்த்தமான எண்ணம் இறப்பை சந்திக்கும் தருவாயில் நமக்கு எழுகிறதா? நடைமுறை வாழ்க்கையில், ஒரு நாளில், பலரின் இறப்புகளை பார்த்தாலும், மனம் ஏதோ புதிதாய் ஒன்று வாழ்க்கையில் நடைபெறுகிறது என்ற போக்கில் தான் செயல்படுகிறது. இறப்பை பொறுத்தவரையில் எதார்தத்தை ஏற்றுக் கொள்ள நம் மனம் நம்மை அனுமதிப்பதில்லை.

மற்றவரின் இறப்பே நமக்குள் இது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் போது, நம் இறப்பைப் பற்றி நமக்கு என்ன சிந்தனை இருக்க முடியும். இன்னும் இரண்டொரு நாளில், நீ இறந்து விடுவாய் என்ற கெடு வைத்தால், அந்த இரண்டொரு நாள் நாம் வாழ்வோமா, இதைக் கேட்ட அன்றே இறந்து போகும் சாத்தியக் கூறுகள் தான் அதிகம். இப்படி மரணமானது நமக்குள் நிதர்சன உண்மையை உணரும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதோ இல்லையோ..பயத்தை பூரணமாக தோற்றுவிக்கிறது. ஆக இறப்பதற்கு ஒருவருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். விருப்பம் இல்லை, ஆனால் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான் துயரம் என்பது இறப்பைப் பொறுத்தவரை அதிகமாக உணரப்படுகிறது.

இங்கு நான் சொல்ல வந்த கருத்து, நம் இறப்பை நாம் வரவேற்க்கத் தயாராகுதல் எப்படி? அப்படி நாம் தயாராக வேண்டிய அவசியம் என்ன? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? வாழுதல் என்பது முழுமையாக இருக்கும் பட்சத்தில், இறப்பையும் நாம் வரவேற்க்க முனைய முடியுமா? இது போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் உதித்திருக்கிறதா..என்பது தெரியவில்லை. ஆனால், இது போன்ற எண்ணங்கள் என் மனதில் உதித்திருக்கிறது.

மேலும் இது பற்றி இங்கு சொல்வதற்கு முன், இது போன்ற விஷ்யங்களில் எண்ணப் பகிர்தலைப் பற்றி உங்கள் அபிப்ராயம் வேறாக இருக்கும்பட்சத்தில், உங்கள் மேல் என் கருத்துகள் திணிக்கப் பட்டவையாகத் தான் நான் உணருகிறேன். அவ்வாறு திணிக்கப்படுதலை தவிர்க்கும் எண்ணத்தில்,உங்களின் மறுமொழிகளின்் மூலம்,இந்த தலைப்பை தொடரலாமா.. வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம் என்று இருக்கிறேன். மிகவும் மென்மையாக கையாளப்பட வேண்டிய தலைப்பு என்பதால் தான், தங்களின் பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களைப் பொறுத்து மேலும் இத்தலைப்பை தொடரலாம் என்ற எண்ணத்துடன் முடிக்கிறேன்

Friday, July 27, 2007

Let us create the creativity !



An awesome presentation by Ken robinson “Do schools kill Creativity?” He is right. We are working hard to remove the illiteracy but we somehow kill the creativity of the children with our structured curriculum. We think and also believe, education can give a fruitful result, when we follow the same structure of learning process and we always stick to it to master up the brilliancy of the students with already proven methods of education in various subjects. Here, we are just following the information but we are not allowed to apply our own thinking based on any concept to rebuild it with different ideas and views to nourish the same.

Once, I have asked the same question to the principal of a Indian school. She totally disagreed with me. And further,she explained , that the class strength is too high to apply the techniques to improve the creativity of the students. And she also included, that they must finish off the syllabus within the limited period of time. But who fixed this time boundary?. As far as, Indian education system is concerned, they are very liberal with their rules and regulations. The Government allow the schools to fix their own syllabus and they can even use their own material to enhance the educational phenomenon. But most of us are not aware of such government rule.

Unfortunately, the school management is not ready to prepare their own material, because they find it difficult and moreover they are not holding teachers who have their own creativity to prepare the same. With the tool of creativity, we can do wonders in our education system. It is the smartest way to achieve the target with less strain. Creative skills helps us to make the learning process easier.It improves the application oriented skills within us as well around us. It creates the desire to learn more , communicate effectively and it kindles the desire to efficiently lead and manage things. In fact , it is a easier process to make the students to understanding the concept quickly.

But this can be achieved , if we are able to adopt our education pattern in creative way. It can be done with new recruits who flourish with creative skills. Creativity in the school atmosphere will draw the new approaches with new strategies derived from the past experience. It increases the openness and acceptability within you. It increases the communication, visualization, understanding skills. It overcomes the dormant state of brain power and it also helps learning to learn and learning to lead.

Schools in India should come forward to create this kind of atmosphere and that will lead to the destiny to change yourself and change the world.

Monday, July 23, 2007

என்னை அரி(றி)கிறேன்

நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றி தெரிந்ததை விட அதிகமாக அடுத்தவர்களைப் பற்றித் தெரியும். அதுவும் அடுத்தவரின் குறைகள் நம் கண்ணுக்கு நன்றாகவே புலப்படும். அதை நம் இயல்பாகவே நாம் கொண்டு விட்டோம். நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்த்து ரசிக்க மனம் ஆசைப்படுவதைப் போல, நம் அகத்தை நாமே உணர்ந்து ரசிக்க நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று சொன்னால், பெரும்பாலானோர், ஏதோ தெரியும் என்ற பதிலைத் தான் தர விழைவார்கள்.

நம்மைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளும் பட்சத்தில், நம்மால் நம் நிறை, குறைகளை சமமாக உணர முடியும். நம் நிறைகளை நாமே வாழ்த்தவும்., குறைகளை நாமே சீர்திருத்திக் கொள்ளவும் பேருதவியாகத் தான் தன்னை உணர்தல் தேவைப் படுகிறது.

நமக்கு மற்றவரின் நிறை, குறைகள் நன்றாகத் தெரிவதால், அவர்களிடம் இருக்கும் நிறைகளால், அவர்களுக்கு தேவைப்படும் போது, உதவ வேண்டும் என்ற எண்ணமும், அதே நேரம், குறைகள் தென்பட்டால், அவர்களிடம் விலகிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. மற்றவருக்காக நாம் செலவு செய்யும் நேரம் தான் அதிகமே தவிர, நம்மை நாமே உணர, அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தினைப் பெற ஒரு நாளில் குறைந்தது இருபது நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும்.

உடம்பிற்கு தேவையான உற்சாகம் கிடைக்க பல வழிகளில் நாம் முயல்கிறோம்.வாரக் கடைசி நாளான சனிக்கிழமையில் , ஒர் இடத்தில் கூட்டம் கூடுவதைப் பார்த்தாலே, தெரிந்து விடும்.உற்சாகம் எவ்வாறெல்லாம் தேவைப்படுகிறது. அதனை எவ்வாறெல்லாம் தேடிக் கொள்கிறோம் என்று.

நம்மை நாமே விமர்சனத்திற்குள்ளாக்கிக் கொண்டாலே போதும், வெளி மனிதர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். எது புத்திசாலித்தனம்? நம்மை நாமே நேரம் ஒதுக்கி, கவனித்து சரி செய்து கொள்வதா? அல்லது மற்றவருக்கு அந்த வாய்ப்பை நல்குவதா?

பொதுவாகவே, அவரவர்க்கு அவரவர் நல்லவரே ! அந்த கருத்து நமக்குள் இருப்பதனால் தாம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் ஆளுமையில் எம்மாதிரி குணங்களை விலக்க வேண்டும், எவ்வகையான குணங்களை சேர்க்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தாலே, நமக்கு நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அது சாத்தியமாகும். தன்னை அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் பட்சத்தில் தான், நமக்கு என்ன தேவை, தேவையில்லை என்ற முடிவுக்கு வர இயலும். மனவியல், வாழ்வியலைப் புறக்கணித்து நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்ககையின் அடிப்படை ஆதாரமே, நம் வாழ்வை நாம எப்படி் சந்தோஷமாக அமைத்துக் கொள்வது, என்று சிந்திப்பதில் தான் இருக்கிறது.

நமக்குள், சிறு சிறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாலே போதும், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள பிள்ளையார் சுழி போட்டதற்கு சமம். ஒரு சில மாதிரிக் கேள்விகளை இங்கு தர விழைகிறேன். கேள்விகளுக்குண்டான பதிலகளை ஆம்/இல்லை என்ற கோணத்தில் கொடுத்துக் கொள்ளவும்

1. நான் இரகசியமாக கர்வம் கொண்டவனா?/ கொண்டவளா?

2. என்னுடைய மோசமான குணங்களையும், தவறுகளையும் எதிர் நோக்க முடியாதவனா?/முடியாதவளா?

3. என்னால் மற்றவரின் கருத்துக்கள், அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

4. என் ஆலோசனைகளை மற்றவர் கேட்டு அதன் படியே நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்பவனா?/ எதிர்பார்பவளா?

5. என் உணர்சிகள் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? கட்டுப்படுத்த கஷ்டமாக உள்ளதா?

6. மற்றவர்களை திருப்தி படுத்த நான் அக்கறை எடுத்துக் கொள்கிறேனா?

7. மற்றவர்களை அனுசரித்துப் போகும் பழக்கம் என்னிடம் இருக்கிறதா?

8. நான் பார்கிற வேலைக்கும், கடமைக்கும், விசுவாசமில்லாத புகழைத் தேடுகிறேனா?

9. கவலைப்பட்டு மனசோர்வுக்கு ஆளாகிறேனா?

10. ஒரு வேலையை முடிக்கிற வரையில் அதனை ஈடுபாடோடு, உற்சாகமாக செய்கிறேனா?

11. மேற்கொள்ளும் காரியத்தில் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேனா?

12. என்னை சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நான் ஆர்வம் கொண்டுள்ளேனா?

13. குடும்பத்தினரிடம் அன்பு செலுத்த அதிக பிரயத்தனம் மேற்கொள்கிறேனா?

14. மற்றவரின் தோழமையை விட எனக்கு நானே தோழன் என்று தனிமையில் இருக்க விரும்புகிறேனா?

15. நாம் முற்றிலும் விரும்பாத நபர்கள் இருக்கிறார்களா?

16. மற்றவர்கள் என்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றோ, உரிய மரியாதை தருவதில்லை என்றோ எண்ணுகிற போக்கு என்னிடம் இருக்கிறதா?

வாழ்க்கையில் எதிர்ப்பார்பதை நீங்கள் அறுவடை செய்யவில்லை என்கிற உணர்வு உங்களுக்கு இருந்தால், தவறு எங்கே என்று, உங்கள் பதிலின் மூலம் புரிந்திருக்கும். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் நீங்கள் எப்படி, என்பதற்கு உங்களின் நேர்மையான பதில்கள், சரியான உத்திரவாதத்தை உங்களுக்குத் தரும்.

Saturday, July 21, 2007

சுயநலம் வளர்.. !

சுயநலம் ஆக்கப் பூர்வமான ஒன்றா? பெரும்பாலும், இதில் உடன்பாடு இல்லாமல் தான் இருக்ககூடும். சுயநலம் சிறப்பான ஒன்று என்று நான் கூறினால், உடனே ஏற்றுக் கொள்ளுதல் இயலுமோ?

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதும், மகிழ்வித்துக் கொள்வதும் சுயநலம் தான். சுயநலம் என்றதும் பொதுவாய் பிறர் நலத்தைக் கவர்ந்து சுயமாய் அமைத்துக் கொள்ளும் நலம் என்றே நினைப்பதனால் வரும் கோளாறு தான் இது.

வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான். கீதையின் தத்துவம் போல, பலனை எதிர்பாராமல் தன் காரியத்தில் தான் ஈடுபடுவதும் - இந்த கண்ணோட்டத்தோடு பார்த்தால் இது சுயநலம் தான். சொல்லப் போனால் வெகு ஆரோக்கியமானதும் கூட.

மனநலத்திற்கும், சுயநலத்திற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தனக்கே நல்லதாகவும், தனக்கு நன்மையை தர வல்லதாகவும் ஆக்கிக் கொள்ளும் விஞ்ஞானமே மனநலம். சுயநலம் என்றதும், நமக்கு அது ஒரு கேவலமான நிலை என்ற பொருளே தொனிக்கிறது இதுதான் மனவியலில் வினோதமான விதி. நாம் வார்த்தைகளை குறியீடுகளாகவே பயன்படுத்தி பழகிக் கொண்டிருக்கிறோம்.

வாக்கியங்களின் அர்த்தங்களை உணராமல், வார்த்தையின் ஒலிகளை குறியீடுகளாக்கிக் கொள்வதாலேயே சிக்கல்.அதனால் தான் சுயநலம் என்ற சொல்லை அர்த்தம் புரிந்து கொள்ளாமல், கேவலமாகவே சித்தரிக்கப் பட்ட சொல்லாகவே நம் வழக்கில் நாம் கொண்டு விட்டோம்.

நாம் சமூகத்தில் ஓர் அங்கம். நாமே நமக்குள் தனியாக வாழ்வது இயலாத நிலை. அப்படி வாழ்வதும் ஏற்புடையதாகாது. இதற்கெல்லாம் சுயநலம் என்பதை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சமூகத்தோடு இயைந்து வாழ்ந்தும், அதே சமயம், தன் இயல்பினை இருத்திக் கொள்வதும். இவ்விரண்டும் ஒரு சேர அமைத்துக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டாலே வாழ்வில் சாதனை மிக எளிதாகி விடும்.

சமூகத்தில் நாம் ஒரு அங்கம் , என்பது போல், ச்மூகமும் நம்மின் விரிவாக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உலகம் பிறந்தது எனக்காக..ஓடும் நதிகளும் எனக்காக என்ற எண்ணத்தோடு சமூகத்தை அணுகும் நோக்கு தென்பட்டாலே, நாம் சமூகத்தில் இயங்குவது எளிதாகிப் போகிறது. அனைத்தும் எமதே என்று கருதுவது ஆணவமாகாது. எனக்கே அனைத்தும் என்று கருதுவது தான் ஆணவம். இவ்விரண்டில் உள்ள அர்த்த வேறுபாட்டை நாம் புரிந்து கொண்டாலே, சுயநலம் என்பதை எதிர்மறையாக நாம் எண்ணாதிருப்போம்.

அக்காலத்து சுயம்வரம் கூட சுயநலத்தை நன்கு சித்தரிக்கும் வகையில் தான் நடந்தேறி வந்திருக்கிறது. இக்கால நிலைப் போல , பெற்றோர் பார்த்து வைக்கும் வரனில், தன்னை இணக்கம் செய்து கொண்டு, தம் விருப்பம் என்ற ஒன்றை விலக்கி, வாழ தயாராகும் பெண்ணிடம் சுயநலம் இருக்கக் கூடாது என்று தான் உலகம் நினைக்கிறது. தனக்கு தானே செய்து கொள்ளும் நியாயமான காரியங்களையும் பிறருக்காக விட்டுவிடும் பொது நலமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அப்படி மற்றவருக்காக தம் வாழ்வை தியாகம் செய்வதில் பெருமை இருப்பதாகத் தான் நாம் கருதுகிறோமே அன்றி, நம்மை அழித்து மற்றவரைக் காத்து, அச்செயலுகுண்டான முழு அர்த்தமும் விளங்காமல், ஜீவிப்பதை என்றாவது ஒரு நாள் மனம் எண்ணாமல் போகாது. அதனால் பூரண திருப்தியும் வாழ்வில் ஒருவர்க்கு கிடைக்காது.ஆனால், வெளியே சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் தான் பெரும் பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு முன் நியாயமாகவும், தேவையாகவும், தர்மமாகவும் புலப்படுபவை நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவுபவை. இவற்றை நோக்கி நாம் முன்னேறும் போது ச்முதாய ரீதியாய் நாம் கற்றுக் கொண்டவை தடையாககின்றன. ஒரு புதிய கருத்தினை கூறும் போது, விவேகானந்தர் விவரித்தபடி கேலி(ridicule), ஆட்சேபம்(opposition) வந்தபின் தான் ஏற்பு(acceptance) அமையும். கேலிக்கும், ஆட்சேபத்திற்கும் அடிபணிவதும், சமுதாயத்தை மீறி சுய நியாயத்தை நிலை நிறுத்தாமல் விட்டுவிடுவதும் சுயநலமல்ல. ஒரு ஆழமான கோக்கில் பார்த்தால் இது பொது நலமும் அல்ல.

மனவியல் ரீதியாக சமூகத்தில் சிறப்புடன் இயங்க, ஒருவருக்கொருவர் இயைந்து நடக்க, அடிப்படையான தேவைகள் நான்கு. வெளிப்படை (openness), பிற நேயம் (empathy), ஏற்பு(acceptance), அக்கறை(caring) வெளிப்படையாய், நம் விருப்பு , வெறுப்பு காட்டினால் , நம் எல்லாமும், எல்லார்க்கும் தெரிந்துவிடும் என்பதும் பாதுகாப்பு தான். ஆனால் பாதுகாப்பு என்பது பல கதவுகளை பூட்டி வைப்பதை விட, சன்னல்கள எல்லாம் திறந்து வைப்பதில் தான் உள்ளது. வெளிப்படை என்பது பூரணமாக வெளிக்காட்டிக் கொள்வதல்ல. தெளிவாய் இருப்பதை உணர்த்துவது.

பிற நேயம் என்பது, மற்றவரது வருத்தங்களை உணர்ந்து கொள்வது. பிறரின் சிக்கல்கள் விளங்கினால் அவர்களை நாம் பாதிக்காமல் இருக்கலாம். நாம் பாதிக்காத எவருமே நம்மை பாதிக்கப் போவதில்லை. நாம் பாதுகாப்பாக இருக்க இதுவும் ஒரு சிறந்த வழி முறையே.

ஏற்பு என்பது, மற்றவரை நம் போல குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளுதல்.இது போன்ற தன்மையை வளர்த்துக் கொண்டால், நம்மையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்று நாம் நினைப்பது போலேயே, மற்றவரும் நினைக்கும் நிலை ஏற்படும். நம் வாழ்வு செழிக்க இவ்வித நிலை ஏதுவாக இருக்கும்.

மேற்கூறிய குண நலன்களை பிறர் நலத்துக்காகத் தான் நாம் காணுகிறோமே அன்றி, நம் சுயத்தை செழுமைப் படுத்த நாம் வளர்த்துக் கொள்ளும் குணங்களாக நாம் கொண்டாலே, சுய ந்லம் என்பதின் முழு அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.