யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, December 11, 2007

பெ(ஆ)ண்


ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் பொருத்தமான படைப்பு தானா? பொருத்தம் என்றால், எந்த விதத்தில்? இல்லை என்றால், காரணம் என்ன?

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ! :)

---------------------------------------------- ****** ---------------------------------
காலதாமதமாக இப்பதிவை பதிப்பதற்க்காக வருந்துகிறேன். மன்னிப்பையும் கோருகிறேன். இத்துணை நாட்கள் பொறுமை காத்தமைக்கு நன்றிகள் பல !

ஆணையும், பெண்ணையும் படைத்த இயற்க்கையின் முன் இருவரும் மிகச் சிறந்த பொருத்தம் உடையவரே..உடற்கூறு அளவில்...

ஒருவருக்கொருவர் பொருந்தும் விதத்திலேயே தான், இருவரின் உடற் பரிணாமங்கள் அமைந்திருக்கிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியினால், செழித்தது, உடற்கூறு மட்டுமல்ல. மனக்கூறும் தான்.

ஆண் ,பெண் இருவருக்கும் , மனரீதியினால் அமைந்துள்ள வேறுபாடுகள், அளவிடற்கரியன. சிந்திப்பதிலும், செயல்படுவதிலும், முனைந்து செயலாற்றுவதிலும், இருவருக்கும் உள்ள வேறுபாடு மிக அதிகமே. எத்துணை தான் வேறுபாடுகள் இருப்பினும், சரிவிகித புரிதல் ஒன்றே, அவ்வேறுபாடுகளை களைந்து, நல்ல உறவு முறைக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால், இயல்கிறதா? அது தான் கேள்வி !

இருவருக்குமே உறவு முறைகளில், ஒரு வித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தான் மற்றொருவரை, நேசிக்கும் போது, எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே தன்னை நேசிப்பவரும், நடந்து கொள்வதே சரியானது என்று எண்ணும் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு தான், எத்துணை புரிதல் இருப்பினும், உறவில் குழப்பம் விளைவிக்கும் கூற்றாக அமைந்து விடுகின்றது.பெண் - தான் சொல்வதை ஆண் , காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் , ஆனால், எதையும் கேளாமலே, தீர்மானத்திற்கு வரும் குணவான்களாக ஆண்கள் இருப்பதாக கருதுகின்றனர். ஆனால்,ஆணோ -தான் செய்யும் ஒவ்வொரு செயலையும், மேல் நிலைப் படுத்த , பெண் எப்போதும் முயல்வதாகவும், அவர்களை அவர்கள் வழியில் செல்ல பெண் அனுமதிப்பதில்லை என்றும் கருதுகின்றனர்.

வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்குண்டான தீர்வை, தனி மனிதனாக சிந்தித்து தீர்த்து வைக்கும் குணம் ஆணுடையது. ஆனால் பெண்ணோ, தன் பிரச்சனைகளை வாய் மூலம் பிறரிடம் பேசி, தீர்மானத்திற்க்கு வரும் குணத்தை உடையவர்கள்.எந்த விஷயத்தையும், பிறரிடம் பகிர்ந்து, ஒரு முடிவுக்கு வரும் பெண்கள், நிச்சயம், பிறரை சார்ந்தே, தனக்கு வேண்டியவற்றையும் தீர்மானிக்கின்றனர். ஆனால், ஆணோ தனக்கு என்ன வேண்டும் என்பதில், தானே சுயமாக முடிவெடுக்கும் குணம் படைத்தவனாக இருக்கிறான்.

பிறரை சார்தல் என்பது, பிறரின் மேல், நம்பிக்கை இருந்தாலொழிய நடக்க இயலாது. பெண், வெகு சுலபமாக, பிறரை நம்பி விடுகிறாள். ஆனால், ஆண் அத்துணை சுலபமாக மற்றவரை நம்பி விடுவது இல்லை.பெண்ணுக்கு, ஒரு பிரச்சனைக்கு, உடனடியாக ஒரு தீர்வு தேவைப்படுவதில்லை. அவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டாலே போதும் என்ற மன நிறைவைத் தான் அவர்கள் எதிர்பார்கின்றனர். ஆனால் , ஆணுக்கு, ஒரு பிரச்சனைக்கு உடனடித் தீர்வு தேவை. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், ஆண்கள் - Result Oriented .

ஒரு பெண், ஆணிடம் தன் பிரச்சனையைப் பற்றி பேசும் போது, அவளுக்கு ஒரு தீர்வினை அந்த ஆண் தர வேணும் என்று எண்ணிப் பேசுவதில்லை. மாறாக, அவள் சொல்வது, முழுதும், கவனிக்கப் படவேண்டும் என்ற எண்ணத்திலேயே, தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.

ஒரு ஆண், அன்பினையும், காதலையும், பிறர் தனக்குத் தேவை என்ற நேரத்தில் மட்டுமே தான் உணர்கிறான், ஆனால், பெண்ணுக்கோ, அவ்வுணர்வு, தான் மதிக்கப்படும் போதும், பாராட்டிக் கூறப்படும் போதும், பாதுகாக்கப்படும் போதும் உணரப்படுகிறது. ஆக, ஆணுக்கு தன் நிலைப் பற்றிய புரிதல், பெண்ணிடம் கிடைத்தாலே பெரும் திருப்தி கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு, தன்னை பற்றிய உயர்ந்த எண்ணமும், பாரட்டுதலும், ஆண் தன்னிடம் அன்பாகவும், காதலுடடையவனாகவும், இருக்கும் போதே கிடைத்து விடுகிறது.

ஆணின் தேவை, அன்னியோன்யமாக இருக்கும் போதே பூர்த்தி ஆகிவிடுகிறது அந்த அன்னியோன்ய சூழலில் இருந்து விடு பட்டவுடனே, ஆண், மிடுக்கானவனாகவும், சார்தலில்லிருந்து (dependence )விடுபட்டவனாகவும் ஆகிபோகிறான். சிறிது காலம் கழித்த பின் தான், திருப்பவும் அவனுக்கு அன்னியோன்ய சூழல் தேவைப்படுகிறது. தேவைப்படும் போது மட்டுமே, அவன் பெண்ணை சார்ந்திருக்க முடிகிறது.அவன் தேவை பூர்த்தி ஆனதும், அவனுக்கு சார்ந்திருத்தல், தேவையில்லததாக ஆகிறது. இது இயற்கையாகவே அவனுள் நடக்கும் மாற்றம்.

பெண்ணோ இநநி்லைக்கு எதிர்மறை.

விழுந்து எழும் அலைகள் போல, அவளின் உணர்வுகள் வெளிப்படும். எப்பவும் சார்தலையே அவளின் தன்மைகள் பிரதிபலிக்கின்றன. தன் சுய மரியாதை மிகும் இடங்களில், அதாவது தன் சுய மரியாதை வெகுவாக தூண்டப்படும் போது, அவள் மிகுந்த அன்பை ஆணுக்கு வாரி வழங்கி, அன்னியோன்யமாக இருக்க ஆரம்பிக்கிறாள். சுய மரியாதை சற்று குறைவாக இருக்கும் போதும், அவளால், ஆணுடன் , அன்னியோன்யமாக உணர முடிவதில்லை.

பெண்ணுக்கு, அக்கறை, புரிதல்,மரியாதை, பக்தி, மதிப்பீடு, உறுதிப்படுத்தல் ஆகியன தன் உணர்வுகளை சுலபமாக காட்டவும், கிரகித்துக் கொள்ளும், உணர்வுத் தேவைகளாக உள்ளன. ஆணுக்கு, நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளல், பாராட்டுக்கள்,ஈடுபாடு, சான்றுரைத்தல், உற்சாகப்படுத்தல் ஆகியன உணர்வுத் தேவைகளாக உள்ளன. இவ்விரண்டு நிலைகளையும் சரிவர உணர்ந்து, புரிந்து, செயல் படும் ஆணும், பெண்ணும் சரநிகர் பொருத்தம் , தமக்குள் இருப்பதாகவே உணரப்படுவர்.

தத்தம் ,துணையின் உணர்வுகளையும், இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலே, ஒருவருக்கொருவர் பொருத்தமான உணர்வை இருவரும் பெற்று விடலாம். பெண்ணைப் போல் ஆண், எப்போதும் காதல் வயப்பட்டவனாகவும், பாசம் மிக்கவனாகவும் இருக்க இயல்வதில்லை. வாழ்ககையின் பல சவால்களை அவன் சந்திக்க நேரிடும் போது அவனுள் இருக்கும் காதல் மறைந்து, அவன் கடமையும், அவனின் குறிக்கோளுமே அவன் மனதில் உணர்வுகளாக இருக்கிறது. அது அவனின் குற்றம் அல்ல. இயற்கை.

பெண்ணோ, எப்பவும் உணர்ச்சிப்பிழம்பாகவும், காதல் வயப்பட்டவளாகவுமே இருக்கிறாள். எவ்வித சவால் நிறைந்த சூழலும், அவளின் இத்தன்மையை மாற்றுவதிற்க்கில்லை. அது அவளின் இயற்கையாகிப் போகிறது, இவ்விருவரின் நிலையை புரிந்து நடந்தாலே, வீணாக உண்டாகும் விவாதங்களை தவிர்த்து விடலாம்.

ஆணை - அவன் ஒரு ஆண், அவனின் இயல்பு இன்னது தான் என்று முழுதும் தெரிந்து புரிந்து, நடத்துவதாலேயும், பெண்ணை, அவள் தன்மை இது தான் என்ற புரிதலோடு கையாள்வதாலேயும், சுலபமாக ஆண், பெண் பொருத்தத்திற்கு தீர்வு காணலாம். இயற்கைப் படைத்த ஆணும், பெண்ணும், உடல் அளவில், மிகப் பொருத்தம் உடையவரே, என்றாலும், உணர்வு பூர்வமான பந்தம் என்ற நிலையில் பார்த்தால், நாகரீகம் கருதி, ஒருவரின் நிலையை, மற்றொருவர், தெரிந்து, புரிந்து, ஏற்று நடந்தாலே, மனப் பொருத்தமும் அமைந்துவிடும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :)

Wednesday, November 14, 2007

தி ..யாகம்



தியாகம் !!

எது தியாகம்? தியாகம் என்பதற்குண்டான அர்த்தம் என்ன? எவையெல்லாம் தியாகம் என்ற வகையைச் சார்ந்திருக்கும்? ஏன்?

உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். :)

----------- ** -----------
தியாகம் என்பதைப் பற்றி சொல்வதற்க்கு முன், எல்லோராலும், தியாகம் சார்ந்த நிகழ்வுகளாக கருதப்படும் செயல்கள் பற்றி பேசுவோம்.

இரு மனம் சங்கமித்து, திருமண வாழ்வில் தியாகம், நாட்டுப் பற்றினால் மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்டால் தியாகம். தன்னையே, இழந்து பிறருக்காக செய்யப்படும் எல்லா செயல்களுமே தியாகம், பெற்ற பிள்ளைகளுக்காக, பெற்றோர் சிரமப்படுவது தியாகம்.கட்டிய மனைவிக்காக, கணவன் கட்டுண்டால் தியாகம்.ஆக, எல்லோருக்குமே, வாழ்க்கையில், ஏதோ விதத்தில் , தாம் தியாகம் செய்கிறோம் என்ற உணர்வும், அதனால், மேலோங்கி இருக்கும் ஒரு உயரிய எண்ணமுமே, தியாகம் என்பதை உயர்த்தி கூற ஏதுவாக இருக்கும் காரணங்கள்.

தியாகம் செய்தல் மிக உயர்ந்த நிலையாக பார்க்கும் பட்சத்தில், சில சமயம், கடமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு போன்றவை எல்லாமே, தியாகச் செயல்களாக எடுத்துக் கொள்ளப் படுவது தான் பரிதாபம். அதிலும், தன்னையே தியாகம் செய்வது (self sacrifice) என்ற நிலை என்னால் புரிந்து கொள்ளப்படாத நிலையாகவே உள்ளது.

யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விடும்.

தனக்கு வேண்டும் என்ற நிலையில் தான், ஒருவளோ, ஒருவனோ, திருமண பந்தத்தில் ஈடுபடுவது. அதன் மூலம், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் பெறப்படுவனவே பிள்ளைகள். பெற்ற பிள்ளைகளை சீராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பெற்றோருடையதே. இதில் தியாகம் எங்கே வந்தது.

தனக்கு வேண்டும் என்ற ஆசையிலும், ஆசையால் விளைந்த அன்பால் நிகழும் செயல்களுக்கெல்லாம் தியாகம் என்ற பெயர் சூட்டி, உண்மை அன்பையும், பாசத்தையும் முழுதும் உணராமல், தன் உறவு கொண்டாட்டத்திற்கு களங்கம் , கற்பிப்பது போல, பிள்ளையை பெற்று வளர்த்ததையே, மிகப் பெரிய தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ளும் மனிதர்களை என்னென்று சொல்வது.!

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், தன் விருப்பம் விடுத்து, மற்றவரின் விருப்பம் நிறைவேற்றுவதும், ஆகிய செயல்களின் காரணம் ஆழ்ந்த அன்பு மட்டுமே. எப்போது, ஒருவருக்கு, தான் தியாகம் செய்வது போல எண்ணம் தோன்றி, மேற் கூறிய பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவர்க்கு பூரண அன்பு மலரவில்லை என்பதை சொல்லத் தான் வேண்டுமோ.

சுயம (Self)் என்பது, எப்போதும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது. அது தான் அதன் இயல்பு. சுயத்தை,துன்புறுத்தி, யாராலும் எந்த செயலையும் செய்தல் இயலாது. தனக்கு திருப்தி அளிக்கும் செயல்களை மட்டுமே, சுயம் அனுமதிக்கும். ஆக, எந்த ஒரு செயலை, யாருக்காகவாது செய்தலும், விட்டுக் கொடுத்து போதலிலும், அடிப்படையான சந்தோஷத்தை சுயம் பெறுகிறது.

ஆத்ம திருப்தி, இல்லாமல், மற்றவருக்காக செய்தல் என்பது நடை பெற இயலாது.ஆக, பலன் என்பது, நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது.அது பொருளாகத் தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. நம் சுயம் திருப்தி அடையும் செயல்களை, அன்பின் காரணமாகவோ, ஆழ்ந்த காதலின் காரணமாகவோ நாம் செய்கிறோமே தவிர, தியாகம் செய்கிறோம் என்று எண்ணும் நிலையில், அங்கு, அன்பும் , காதலும், வேட்கையும் சாகடிக்கப்படுகிறது.

Tuesday, November 6, 2007

and A.. Abstract thinking..


எண்ணங்களே நாம். நம்மை ஆட்டுவிப்பதும், ஆர்ப்பரிக்க வைப்பதும் அவைகளே. எண்ணங்களின் தன்மையே, ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது. மனம் வேறு, அறிவு வேறு என்ற வேறுபாடுகள் பேசினாலும், இல்லை, இரண்டும் ஒன்று தான் என்று கருத்தினைக் கொண்டிருந்தாலும்,அதையும் நம் எண்ணுதல் மூலமே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும்.

அன்றாடம் நம்மை சுற்றி , நம் வாழ்வில் பல நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், அவற்றில் எவற்றை நாம் அதிகம் கிரகித்து தக்க வைத்து, அவ்வெண்ணங்களின் வழியே, உலகை உற்று நோக்குவதும், அவ்வெண்ண்ங்களின் தாக்கம் காரணமாக, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நம்மை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் கையிலே.

தீதும் , நன்றும் பிறர் தர வாரா. ஆக, எல்லாமே நாம் எண்ணுவதிலும், அவ்வெண்ணங்களைப் பற்றி தீவிர சிந்திப்பும், அச்சிந்திப்பின் விளைவாக, செயல்படுதலும், பின் செயல்பாட்டுக்குத் தகுந்த விளைவுகளையுமே அனைவரும் அனுபவித்து வருகிறோம்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பது ஒரு வகை என்றால், அந்நிகழ்வுகளை சார்ந்து, நம் எண்ணங்களை விரிவுபடுத்துதல் மற்றொரு வகை. ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளும், அதைத் தொடர்ந்து அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை தேடுவதுமே , எண்ணங்களை விரிவுபடுத்த உதவும் கருவியாக இருக்கிறது. ஆக, அறித்ல் என்பதை அடுத்து, பகுத்தறிதல் என்ற நிலையில் தான் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

சிந்தனை ஒரு விதமான சுவை.தேடல், ஒரு வகையான ஆனந்தம். ஆறறிவு கொண்ட எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. ஆனால், அச்சிந்தனையைக் கொண்டு வாழ்வில் அவர்கள் தேடுதல் என்ற நிலையை அடைவதன் மூலம் தான் அவர்களின் எண்ணம் விரிவாக்கம் பெறுகிறதா இல்லையா என்பதை கூற முடியும்.

இருப்பதை இருப்பதாக ஏற்றுக் கொள்வதில் , செளக்ரியம் உண்டு தான். ஏனெனில் , அதில் சிரமப் பட வேண்டாம். எது எதுவாக சொல்லப்பட்டதோ, அது அதுவாகவே உணரப்படும் என்று சுலபமாக சொல்லிக் கொண்டு காலத்தை தள்ளி விடலாம். காலகாலமாக, பழக்கத்தில் இருந்துவரும், நம்பிக்கைக் கோட்பாடுகளும், இத்துணைக் காலம், வேறூன்றி நின்று நிலைத்து நிற்கும், என் கலாச்சாரமும், அதனைச் சார்ந்த சம்பிரதாயங்களும், எனக்கு நல்லன தராமலா போய்விடும் என்ற எண்ணமும், என் முன்னோர்களை விட நான் என்ன பெரிதாக எண்ணி விடப் போகிறேன் என்ற எண்ணமும், இத்துணைக் காலம், சீர் காத்து வந்திருக்கும் என் பண்பாடு, என் எண்ணங்களால் சீர் குலைந்து போக நான் காரணமாக இருக்கலாமா என்ற எண்ணமுமே, நம்மில் பலரை எண்ண விரிவாக்கத்திற்கு தடை போட வைத்திருக்கிறது.

யாருக்குத் தான் எழாது கேள்வி. யாருக்குத் தான் வராது சந்தேகம். வாழ்வு என்பது இப்படித்தானா. கடைசி வரை ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டுமா. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, என்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப் பட வேண்டுமா. ஆம் ! என்றால், ஏன்.இல்லை என்றால், ஏன் ! எனக்கு என் வாழ்வில் என்ன வேண்டும், எதை நோக்கி நான்.. இவை எல்லாமே எல்லோருக்குள்ளும் எழும்பத்தான் செய்கிறது. ஆனால், அதை எல்லாம், சிரத்தையாக கவனித்து, அக் கேள்விகளுகுண்டான பதில் கிடைக்குமா, இல்லை, நான் தேடவேண்டுமா என்பதை அவரவரின் ஈடுபாடும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும், சொன்னதிற்கேல்லாம் தலை ஆட்டாமல், ஏன் என்ற கேள்வியை எழுப்பி விடை காணும் பழக்கமுமே நிர்ணயிக்கிறது.

ஆனால், அத்தகைய நிலையை அடைய அசாத்திய தன்னம்பிக்கைத் தேவைபடுகிறது. தன்னம்பிக்கை வளர்த்தல் ஒரு புறம் என்றாலும், தன்னபிக்கை ஊட்டலில் தான் ஒருவன், அத்தகைய உறுதியைப் பெறுகிறான். தன்னபிக்கை ஊட்டல், சூழலிலிருந்து தான் கிடைக் பெறும். ஆக, எச்சூழலில் ஒருவன் வளர்க்கப் படுகிறானோ, அதற்குத் தக்கவாறே, அவன் தன்னம்பிக்கை வலுப்பெறுகிறது. அவ்வலுவூட்டமே, கேள்விகளை அவனுள் எழுப்ப ஏதுவாகிறது. கேள்விகளை எழுப்பத் தொடங்கியவுடனே, அவன் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

ஏன்? என்ற கேள்வி ஒன்றே, இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். பரிணாம வளர்ச்சி என்பதற்கு முடிவு தான் ஏது. வளர்தல் ஒரு முடிவுறா பயிற்சி. ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால், வளர்ச்சி என்பது, எப்போதோ தடை பட்டு போயிருக்கும். எண்ணங்களின் விரிவாக்கமே, தடையில்லா வளர்ச்சி காண உதவும் கருவி.

எண்ணங்களின் விரிவாக்கத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது என்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மனதில் எழும் ஒரு கேள்விக்கு, ஓராயிரம் பதில்கள் உண்டு என்பதை வெகு நிச்சயமாக நான் நம்புகிறேன். ஏன்? இந்த பதிவே கூட அத்தகைய விரிவாக்கமே.

கடந்த ஆறு பதிவுகளையும், இங்கு பதிக்க தூண்டு கோலாக அமைந்த திரு.குமார் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியையும், இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து, என்னையே எனக்குள் திருப்பிப் பார்க்க வைத்து, எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.இத்துணைக் காலம், தனி ஒரு மனித குண நலன்கள் பற்றி, தனித் தனி பதிவா என்று எண்ணியும், ஆர்வம் மிகுதியால் அதை படித்து, பொறுமை காத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள். !


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, November 1, 2007

S- Solitude, O- Obvious, W -Willful,M - Magnanimous , Y for Yield


Y - Yield

பணிதல்

பொதுவாகவே பணிந்து போவதென்பதை அடங்கிப் போவதாகவும், நமக்குத் தகுந்த நிலை அல்ல அது என்பதாகவுமே ்பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஒருவருக்கு கீழ் அடங்கிப் போதல் என்பது, ஏதோ நம்மையே நாம் அவர்க்கு கீழ் அடகு வைத்தது போலே தான் உணரப்படுகிறது. கிட்டத்தட்ட தன் நிலை தாழ்தல் போலவே, பணிதல் நிலை உணரப்படுகிறது. காரணம், " நான்" என்ற தன்முனைப்பு எண்ணமே. நம்மையே நமக்கு அறிமுகப்படுத்துதலும் அதுவே.

பொதுவாகவே, மற்றவர் நமக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். நமக்கு அடங்கியிருப்பவர்களைத் தான் பெரும்பாலும் நாம் நேசிக்கிறோம். நம் சொல் பேச்சு கேட்பவர்களையும், நமக்குத் தலை ஆட்டுபவர்களையுமே நாம் அன்பு கொள்ளத் தலைப்படுகிறோம். அது தான், நாம் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த முறை என்றும் நினைக்கிறோம். காரணம், மற்றவர் நமக்கு முன், அடங்கிப்போகும் போது, நம் தன்முனைப்பு ஆனந்தம் கொள்கிறது. நம் உயரம்், அவர்கள் தலை தாழ்தலால், மேலும் உயரமாகிப் போகின்ற உணர்வைப் பெறுகிறோம்.

உற்று நோக்கினால், அப்படி ஒருவர் நமக்கு அடங்கிப்போதல் என்பது பாசாங்கு மட்டுமே. நாம் சென்றபின் , அளவுக்கு அதிகமாக, அடங்கிப்போனவர் எம்பிக் குதிக்கும் மன நிலையில் தான் இருப்பார். அதனால் தான், மேலதிகாரிகளிடம், மிகவும் அடங்கிப் போபவர், தனக்கு கீழ் இருப்பவர்களை வாட்டி வதைப்பபராகவே இருப்பார். அடங்கியிருப்பது பணிவாகாது. அது மரியாதையும் ஆகாது. அது சமயோஜித புத்தி மட்டுமே,.

பணிந்து போவதில் , கீழ்படிதலும் ஒரு வகையே. ஒரு நிகழ்வின் சகல விளைவுகளையும் புரிந்து கொள்வதால் மட்டுமே கீழ்படிதல் சாத்தியம். கீழ்படிதல் என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமால், தன் பணி சிறக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்காக ஒருவரின் பேச்சுக்கு கீழ்படிந்து போவது.எதைச் சொன்னாலும், பணிந்து போவது என்றில்லாமல், நியாயமானதிற்க்காக பணிந்துபோவதே.

அடங்கியிருத்தல், கீழ்படிதல், இவை மட்டும் பணிதலின் வகையாகாது. இவை எல்லாவற்றிலும் உயர் நிலை உண்டு. அது தான் நான் இப்பதிவின் மூலம் தெரிவிக்கவிருத்த நிலை. ஒப்படைத்தல். சரணாகதி அடைதல்.மேற்கூறிய நிலைகளில், ஒருவர் மட்டுமே ஈடுபட அதிக வாய்புண்டு. ஆனால், ஒப்படைத்தல், பரஸ்பரம் நிகழக் கூடியது. இந்நிலையில் தான் இரு " நான்" களும் காணாமல் போகக் கூடிய சாத்தியங்கள் அதிகம்,இரு நபர்கள், தத்தம் தன்முனைப்பை, தாமிருவரும் ஒப்படைக்கும் விஷயத்திற்க்காக உதறி தள்ளி உறவு பாராட்டிக் கொள்ளல் சாத்தியமாகிறது.

தம்மை முழுதும் இழத்தல் ஒரு அரிதான நிலையே. நான் சொல்லும் இக்கருத்துகள் தத்துவார்த்தமாகத் தான் இருக்க இயலும். படித்து தெரிந்து, புரிந்து கொள்ள இந்நிலை சாத்தியமே இல்லை.உணர்ந்து மகிழ வேண்டிய நிலையே இந்த ஒப்படைத்தல் நிலை.

ஒப்படைப்பவர்களுக்கு கட்டளைகள் தேவையில்லை. வேண்டுகோள் போதுமானது. அதிகார தோரணை தேவையில்லை. அன்பு செய்கை போதுமானது. குறிப்புகள் தேவையில்லை.குறிப்பறிதல் போதுமானது. சொல்வதற்கு முன்பே செயல்கள். ஆழ்ந்த உள்ளுணர்வு மிகைப்படுவது ஒப்படைத்தலினால் தான். மொட்டுகள் மலர்வது எப்படி கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் நிகழ்வாக இருக்கிறதோ, அப்படியே இந்த ஒப்படைத்தலில் உறவு மலர ஆரம்பிக்கும்.

அடங்கிப்போபவர்கள் தான் அடக்கி விடுபவர்களாகவும் ஆகிறார்கள், அத்தகையவர்கள், ஒப்படைத்தலின் சுவை தெரிந்து கொண்டால், அவர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இயலாமையால் கிடைத்தவையாய் இல்லாமல், அன்புமயம் என்ற ஆழ்ந்த குளத்தின் குளிர்ச்சியால் கிடைத்தவையாயிருக்கும்.

இத்தகைய சுவையை ஏட்டில் புரட்டி மட்டும் சுவைக்காமல், பரஸ்பரம் அதை முழுதும் சுவைத்த , சுவைக்கின்ற நிகழ்வை என்னால் எழுத்தின் மூலம் வடிக்க இயலவில்லை !

Wednesday, October 31, 2007

S- Solitude, O- Obvious, W - Willful, M for Magnanimous


M - Magnanimous

பெருந்தன்மை.

என்னை மிகவும் கவர்ந்த, என்னுள் எப்படியாது வளர்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட தன்மைகளில் முதல் நிலை வகிப்பது இதுவே. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது என்னுடைய பிறந்த ஊர். ஒவ்வொரு ஊருக்கென்று தனித்தன்மைகள், அவ்வூரின் பேசும் பாஷை போன்றவை வேறுபடும். சில விஷயங்கள் மட்டுமே நம்மை ஈர்பதுண்டு. அது போல என்னை , என் ஊர் மக்களின் பெருந்தன்மைப் போக்கும், விருந்தோம்பலும், சிறு வயதிலிருந்தே ஈர்த்ததுண்டு.என் வீட்டில் அவ்வளவாக இல்லாத ஒரு தன்மை, என்னை வெளி மனிதர்களின் பெருந்தன்மைப் போக்கினால், மிகவும் ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை தான். ஆனால், அத் தன்மையை எனக்குள் இயல்பாக கொண்டு வர, பல பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.

எந்த ஒரு தன்மையும் அவரவர் வீட்டிலிருக்கும் மனிதர்களின் இயல்புகளினாலோ, அல்லது பழக்கத்தினாலோ சிறு வயது முதலே, பெரியவர்களால் ஊட்டப்பட்டும், அல்லது அறிவுறுத்தப்பட்டும், அல்லது கால காலமாக தொடர்ந்து வரும் மரபணுக்களினாலோ தான் சாத்தியமகிறது. எந்த ஒரு இயல்புக்கும், பெற்றோரின் அணுகு முறையும், அவர்கள், மிக முக்கியம் என்று அறிவுறுத்தும் பாங்குமே, நம்முள் , அத்தகைய இயல்புகளை வளர்க்க ஏதுவாக இருக்கிறது.

ஆனாலும், பல இயல்புகள், குடும்பத்தார் அல்லாத மற்றவரின் பங்களிப்பாலேயே நம்முள் வளர்க்கப்படுகிறது. ஆனால், எத்துணை பேர், அத்தகைய மாற்றத்திற்க்கு தம்மை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவரவர் கையிலே தான் உள்ளது. உலகைப் புரிந்து கொள்ளத வயதில்,. தாய், தந்தை, மற்றும் குடும்பத்தாரின் மூலம் கற்றுக் கொண்ட சில நன்மை தராத இயல்புகளை, உலகம் புரியும் வயதிலேயும், நம்மிடையே வைத்துக் கொண்டு, " நான் இப்படித்தான்" என்று தான் பலரும் சொல்லிக் கொள்கிறோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இயல்புகள் , தன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால். அவற்றை தம்முடையதாக்கிக் கொள்ள தீராத ரசனை மிகவும் இன்றியமையாததாகிறது.



எதை நாம் ரசிக்கிறோமோ, அதன் பாலே தான் நாம் ஈர்க்கப்படுகிறோம். எது நமக்குப் புரிகிறதோ, அதன் பால் தான் நம் ரசனையும் செல்லும். அவ்விதமாக எழும்பும் ரசனையை, ரசனை என்பதோடு மட்டும் விட்டு விடாமல், அதை எத்தகைய வழியில் நமதாக்கிக் கொள்கிறோம் என்பதில் தான், நாம் நம்முள் நாம் வளர்க்க விரும்பும் இயல்புகளும் அமையப் பெறுகின்றன.

என் வாழ்க்கையில், இத்தகைய ரசனை தான், பெருந்தன்மைப் போக்கை எனக்குள் நான் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகப் பதித்தது. சொல்லப் போனால், பெருந்தன்மை போக்கு உள்ளவரெல்லோருமே, நல்லவர்களாகத் தான் அன்றும், இன்றும் எனக்குத் தெரிந்திருக்கிறார்கள். அது உண்மையும் கூட. வாழ்க்கையின் எத்தகைய நிகழ்விலும், இந்த பெருந்தன்மைப் போக்கானது, எதிர்மறையான விளைவுகளை புரட்டிப் போட்டிருக்கிறது.

இரு சகோதரர்களுக்குள்ளே நடைபெறவிருக்கும் சொத்து பாகப்பிரிவினையில் கூட, ஒருவரின் பெருந்தன்மைப் போக்கானாது, மற்றவரின் மனதை நொடிப் பொழுதில் , முழுதும் மாற்றிய விந்தையை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நல்ல உறவு முறைகளுக்கு அன்பு எப்படி ஆதாரமோ, அதே போல் தான், பெருந்தன்மைப் போக்கும், நல்ல உறவு முறைகள் காலங்காலமாய், சீர் பட நிலைத்து நிற்கக் காரணமாய் விளங்குகின்றது.

பெருந்தன்மையினால், ஒருவர் உயர உயர செல்கிறாரே அன்றி, அவர் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அடிக்கடி, மனதிலெழும், வள்ளுவனின் வாக்கு,

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்"

- இக்குறள் பெருந்தன்மையையே பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன். அகிம்சை வழி என்பது எப்படி, வீரியமிக்க வழியோ, அதே போல தான், பெருந்தன்மைப் போக்கும், வீரியமிக்கது.சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் இத்தன்மை வியக்கத் தக்கதே. அதெல்லாம் குடும்பத்திலேயே வரணும்" - என்று அங்கலாய்பதில் அர்த்தம் இருந்தாலும், பிரயத்தனப்பட்டாகினும், இத்தன்மையை நமக்குள் நாம் வளர்க்க முயற்சித்தால், இத்தன்மை நம்மையும், நம்மைப் போல் பிறரையும், நல்ல உறவு மேம்பாட்டில் எப்போதும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Monday, October 29, 2007

S- Solitude, O- Obvious, W for Willful


மனத்திட்பத்துடன் (Willful) கூடிய மனத்திண்மை(Determination).

பொதுவாகவே எந்த ஒரு செயலுக்கும், அது செம்மையுற நடைபெறவும், நம் மன ஓட்டமே காரணமாக அமைகிறது. இச்செயலை நன்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்சத்தில், அதை நன்கு செய்து முடிப்பதும், இச்செயல் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று எண்ணுகையில், அதனை அத்துணை முனைப்போடு செய்யாமல் போவதும், நம் மனத்தினால் எழும் எண்ண ஓட்டங்களினாலேயே நிகழ்கின்றது. ஆக, ஒரு செயல், அதனை செய்யும் திறன், அத்திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நற்பயன் காணும் போக்கு எல்லாமே நம் மனத்திட்பத்தாலும் அதனை அடுத்து நமக்கு கிடைக்கும் மனத்திண்மையினாலுமே அமையப் பெறுகிறது.

எப்படி, அதிகாலை துயில் எழ, உடம்பைப் பழக்க வேண்டும் என்று எண்ணி, அதனை தினமும் மேற்க் கொண்டு உட்லை பழக்குகிறோமோ, அவ்வாறே, நம் மனத்திண்மையையும் பழக்கப் படுத்திக் கொள்ளலாம். எல்லாமே பழக்கத்தில் அமைவது தான் .சித்திரமே கைப்பழக்கத்தில் அமையப் பெறும் போது, மற்றதெல்லாம் எம்மாத்திரம்.

முதலில்,செயலைச் செய்வதில் மனத்திட்பம் என்றால் என்ன, என்று பார்ப்போம். எந்த ஒரு செயலையும், இதை செய்தால் என்ன, என்று தீர்க்கமாக எண்ணுவது தான் மனத்திட்பம். தீர்க்கம் என்ற நிலை உண்டாகும் போதே, அச்செயலை செய்ய ஒரு வித ஈடுபாடும், அச்செயலை எப்பாடு பட்டாகினும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் பெறுகிறோம்.

மனத்திட்பம் என்பது, முதலில் நம்மை ஒரு செயல் தொடங்க நம்மை ஈடுபடுத்தும் செய்கை தான்.இதைத் தான் When there is a will, there is a way என்று கூறியிருக்கிறார்கள். ஒரு செயலில் நம்மை முனைக்கச் செய்யச் செய்தாலே போதும், அச்செயலை ,எத்தகைய வழியில், அதை சீர்படச் செய்யும் வழி தானாகவே புலப்படும்.வழி புலப்பட புலப்பட, அச்செயலை செய்யும் ஆர்வமும், அதனை செம்மையுற செய்து முடிப்பதில், உறுதியும் பிறக்கும். மனத்திட்பத்தை நமக்குள் பழக்கினாலே, மனத்திண்மையை நாம் பெறுவது உறுதி.

மனத்திண்மை என்பது, நம் ஆளுமைத்திறனை(Personality development) வளர்க்கச் செய்ய பெரும்பாலும் உதவுகிறது. எப்போது, ஒரு செயலைச் செய்ய நம் மனத்திட்பத்தினால் , அதனை அணுகுகிறோமோ, அப்போதே, அச்செயலினால், நம் ஆளுமையில் (Personality), வாக்குறுதி (அ) கடமைத் திறன் (Commitment) அதிகரிக்க ஆரம்பிக்கிறது. கடமைத்திறன் அதிகரிக்க அதிகரிக்க, நம் பொறுப்புக்களை (responsibilities) முழு ஈடுபாட்டோடு நாம் எடுத்து செய்ய, நம் ஆளுமை பழகிக்கொள்கிறது.

பிறகு, எந்த ஒரு செய்லை நாம் செய்ய, அதில் ஈடுபட்டாலும், நாம் வளர்த்த மனத்திண்மையானது, அச்செயலை, கடமைத்திறனுடனும், தலையாய பொறுப்புடனும், செய்து முடிக்க வழி நடத்துகிறது. இதுவே பழக்கமாகி விட்ட பட்சத்தில், நம் ஆளுமை, எச்செயலையும் கச்சிதமாக (perfect) செய்து முடிக்கவே செய்யும். கச்சிதமாக முடிக்கும் மனோபாவத்தைப் பெற்று விட்டாலோ, எதையும் இலகுவாகவும், ஆர்வத்துடஞும் அணுகும் வித்தை நமக்குத் தெரிந்து விடும்.

என்னுள், இத்திறன் இயல்பாக அமைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆனாலும், பல செயல்களுக்கான வித்தை, பலரின் துணையோடு தான் செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முனைக, வளர்க ! :)

Wednesday, October 24, 2007

S for Solitude - O for Obvious


Obvious

புரிதல் - தெளிவாக புரிந்து கொள்ளுதல். இத்தன்மை என்னுள் இயல்பாக இருக்கிறதா, அல்லது நானாக என்னையும் அறியாமல், அதன் பால் ஈர்க்கப்பட்டு அத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தேனா என்பது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கும், அதனைச் சார்ந்த விளைவுகளுக்கும், இந்த புரிதல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, என்னுடைய அபிப்ராயம். எங்கே நாம் புரிந்துக் கொள்ளப்படுகிறோமோ, எங்கே நம்மால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதோ, அங்கு ஒரு செளகரியமும், திருப்தியும் உண்டாக்கப்படுகிறது. செளகரியமாக உணர்ந்தாலே, நமக்கு தேவையான சூழல் கிடைத்து விடுகிறது. நல்ல சூழல் அமைந்தாலே, நல்ல உறவும் மேம்படுகின்றது.

பிரச்சனைகள் என்பது அறவே உண்டாகாமல், தடுக்கும் வழியாகவே இப்புரிதலைக் கொள்ளலாம். எல்லோருக்குமே, புரிதல் என்பது முக்கியமானதாகவே கருதப்படுகிறது. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க .. என்பது தான் பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பு. பல பிரச்சனைகளை நம்முடைய நிலையில் இருந்து மட்டுமே பார்பாதாலும், பரிசீலிப்பதாலுமே, அப்பிரச்சனைக்கு சரியான தீர்வை சுலபமாகவும், நடு நிலையாகவும் எடுக்க முடியாமல் போகிறது. நம்முடைய சூழ்னிலைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே, பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. எனவே தான், நம் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதாக நமக்குப் புரிகிறது. அதனாலே, நாம் பாதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்ற உணர்வும் எழுகிறது.

நமக்கென்று வரும் பிரச்சனைகளி நாம் பாதிக்கப்படும் போது, நாம் உணர்ச்சிகளின் ஆழத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதனாலேயே, மற்றவரின் , உணர்வுகளும், அவர் பக்கம் இருக்கும் நியாயங்களும் நமக்கு புரிவதில்லை. நம் காயம் தான் பெரிதாக உணரப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவரின் செய்லும் அல்லது நடத்தையும் பூதாகாரமாகவே தோற்றமளிக்கிறது. இது தான் உண்மை நிலவரம் என்று நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலோ நம்முடைய உணர்வுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகி, ஏற்ப்பட்ட காயம், ரணமாக ஆகி, வடுவாகவும் பதிந்துவிடுகிறது.

இத்தகைய நேர்வை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அல்லது முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்.

என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)