யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, September 29, 2007

அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது !!



ஒரு வீட்டில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம்..

"அம்மா ! ஏம்மா, நம்ம கிட்ட கார் இல்ல...மாமா கிட்ட இருக்கு...."

- "அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா..நாமெல்லாம் ஏழை..நம்ம கிட்ட பணமில்ல.."

"நாம ஏம்மா..ஏழை.... அதிர்ஷ்டம்னா ப்ணமாம்மா..?"

- " இல்லடா..அதிர்ஷ்டம் இருந்தா பணம் இருக்கும்..பணம் இருக்கறதுக்கு அதிர்ஷடம் வேணும்டா.."

"அப்பாவுக்கு ஏம்மா அதிர்ஷ்டம் இல்ல.."

- "தெரியல.."

"உனக்கு அதிர்ஷ்டம் இருக்காம்மா"

-"உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"

"எனக்கு இருக்காம்மா அதிர்ஷ்டம்.."

-உனக்காது இருக்கட்டும்..

இதே பாணியில் இல்லாவிட்டாலும், இதே கருத்து பலரிடம் நிலவுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன? அது பலருக்கு, எதிர்ப்பார்ப்பு, கனவு,ஆசை. நிஜ வெய்யிலிலிருந்து இளைப்பாற பொய் நிழல்

அதிர்ஷ்டம் என்பதை மச்சம் என்றும், ஜாதகம் என்றும், வரம் என்றும், முற்பிறப்பின் பலன் என்றும் காலங்காலமாய் கூறி வந்தாலும், விஞ்ஞான பூர்வமாய், இது சரியா என்று ஆராயப்படவில்லை.எனினும், மனவியல் ரீதியாக, இதற்கு பிண்ணணி இருப்பதாகவே கொள்ளலாம்.

பரீட்சைக்கு, அதிர்ஷ்டமான பேனாவை கொண்டு செல்வதிலிருந்து, திறமையானவர்கள் கூட, இந்த ஷ்ர்ட், ஷீஸ் அதிர்ஷ்டமானது என்று வைத்துக் கொள்வது, மனத்திறனோடு சம்பந்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திறமை, சக்தி, ஆர்வம், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தீர்மானம் இருப்பவர்கள் கூட, அதிர்ஷ்டம் தேவை என்று நினைக்கக் காரணம் என்ன? அச்சம் மட்டுமே.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, அதிர்ஷ்டத்தை வேண்டுவதாகாது. நனறாக, தயார் செய்து கொண்ட பின்னும், ஒரு செயலைச் செய்ய தக்க திறமையைக் கொண்டிருந்தும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லாமும் நல்ல விதமாக நடக்கும் என்ற எண்ணத்தை ஒரு கவசம் போல கொள்வதினால், தன்னம்பிக்கை என்ற வேர் பழுது படாமல், பார்த்துக் கொள்ள ஏதுவாகிறது.

தன் மேல் எத்துணை நம்பிக்கை வைத்தாலும், தன் செய்லகளின் விளைவுக்கு தான் காரணம் அல்ல. என்ற ஏண்ணமே , இத்தகைய போக்கினை வளர்க்கிறது. முதல் காரணம் அச்சம், அடுத்தது, தன்னம்பிக்கை குறையாமல், அவ்வேலையை செவ்வனே செய்ய, தன் சக்தியை மீறி , வேறொரு சக்தி தேவைப்படுவதாக எண்ணும் எண்ணமே, அதிர்ஷ்டம் என்பதை எதிர் பார்த்துக் காத்திருக்கச் செய்வது.

அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மனிதன் எப்போது நம்ப ஆரம்பிக்கின்றான். எப்போதுமே ஒருவர் வாழ்வில் வெற்றியோ, நல்ல நிகழ்ச்சிகளோ நடை பெறும்போது, அதிர்ஷ்டம் பற்றி அவன் சிந்திப்பதேயில்லை. சட்டென்று தோல்வியை சந்தித்துக்கும் போது, அடுத்து நடைபெறும் காரியத்தில் தனக்கு நிச்சயம் வெற்றிக் கிட்டுமா? எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா? என்று ஆராய்தல் அவனுள் ஏற்படுகிறது.

இது இயல்பு தான். தடுக்கி விழப்போகும் நேரத்தில் தானே, தடி தேவைப்படும்.எப்படியாது, இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற பதட்டம் நேரும் போது தான், பயம் ஏற்படும் போது, ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்க்கு வலுவூட்ட. அத்துணையாகத்தான், அதிர்ஷ்டம் பற்றிய எண்ணமும், அதனை சார்ந்த செயல்களான, நல்ல நேரம், ஜாதகம் , எண் கணிதம், போன்றவை பார்த்தலும் ஏற்படுகின்றன.

அதிர்ஷ்டம் என்பது ஒரு வித நம்பிக்கையே. உலகம் முழுதும் இந்த விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. வீட்டில் இயந்திரம் கட்டினால், செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். அப்படி கொட்டி விடுகிறதா. ஆனாலும், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நோக்கத்தில் , செய்து தான் பார்போமே, என்ன தான் ஆகிறது என்ற எண்ணத்தில் செய்யப் படுவன தான் ,இயந்திரம், வாஸ்து, குபேரன் சிலை வைப்பது, வீட்ட்ன் நுழை வாயிலில், கண்ணாடி வைப்பது போன்ற செயல்கள்.

ஆனால் அதற்காக, நாம் செய்ய வேண்டிய தொழிலையோ, காரியங்களையோ நாம் செய்யாமல், அதிர்ஷ்ட்ம் எனக்கு உண்டு, என் ஜாதகமே சொல்கிறது என்று பேசாமல் இருந்து விடுகிறோமா. மனதிற்க்கு ஒரு ஆறுதல், ஒரு விதமான பிடிப்பு, எல்லாமும் செய்து, அதிர்ஷ்டம் வரவழைக்கும் வழியையும் செய்து விட்டாகி விட்டது. இனி கவலை இல்லை,. நடப்பது நடக்கட்டும் என்ற மனத் திண்மையை அடைவதற்காகவே அதிர்ஷ்டத்தை நம்பவும், விரும்பவும் செய்கின்றனர் பலர்.

ஆக அதிர்ஷ்டம் என்பது என்ன? நல்ல முறையில் எல்லாம் நிகழும் போது, அதன் தொடர்பாய், நினைவாய், பொருளோ அல்லது நபரோ இருந்தால், அது நமக்கு தொடர்ந்து விளைவிக்கும் அமைதியே அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆக அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே. இச்சாதனங்கள் அமைதி மட்டுமே தரும். வெற்றி பெற முயற்சி ஒன்றே வழி. இது அனைவருக்கும் தெரிந்ததே.

" பார்வை இலக்கில் பதித்து விட்டால், பள்ளம் மேடு எதுவுமே பாதையில் கிடையாது"

" எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு "

- இந்தப் பார்வை நமக்கு வரும் வரை, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையை கைத்தடியாய் வைத்துக் கொள்வதில் தவறில்லை. கண் திறந்து விட்டால், காட்சி தெரிந்து விடும். பாதை தெரியும், பயணம் புரியும். புரிந்தால், நடக்க வலு வந்து விடும். வேகம் கூடும். அப்போது எந்த வித தடியும் தேவைப்படாது.

Wednesday, September 26, 2007

வாழ்க்கை - அர்த்தம் ? (தொடர்ச்சி - II )



இனிக்கச் சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, நாம் ஏன், வாழ்க்கை என்பதே ஒரு குறிக்கோளுக்காகத் தான் என்று உருவகப்படுத்தி, அக்குறிக்கோளை அடைந்து விட்டால், வெற்றி கண்டதாகவும், அக்குறிக்கோளை அடையா விட்டால், தோல்வியை தழுவியதாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம்.

இலக்கு என்பதை வெகு சுலபமாக, அமைத்து விடுகிறோம். அதனை அடையும் வழியைத் தான் வெகு கடினமாக வகுத்துக் கொள்கிறோம். அதற்க்காக போராடவும் செய்கிறோம்.இதே போக்கில் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டால், அந்த போராட்டம் எப்போதுமே தொடர்வதாகத் தான் வாழ்வு அமையும். ஏனெனில், நமது குறிக்கோள்கள், வாழ்வின் போக்கின் படி மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒன்றை சாதித்து முடித்த பின், அடுத்தது என்ன சாதிக்க போகிறோம் என்ற மன நிலையே மிஞ்சும். அதற்காக குறிக்கோள் இல்லாமல் இருந்து விடு என்று கூறவில்லை. வாழ்க்கைக்கு என்பதற்க்கு தனியான குறிக்கோள் இருக்கிறது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே என்று தான் கூற விழைகிறேன்.

பின் எப்படித் தான் வாழ்வை எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வி எழுகிறது ! இல்லையா ! வெகு இயல்பாக, சுலபமாக, பதமாக, இதமாக, எதார்த்தமாக, வாழ்வை எடுத்துக் கொள்ள தெரிந்தாலே, வாழ்க்கை வெகு சுலபமாகிப் போய்விடும்.குழந்தைகளைப் போல.வாழ்வை தம் போக்கில் சுகமாக்கிக் கொள்ளும் ஜீவன்களைப் போல, இருக்க முயன்று விட்டாலே, வாழ்க்கையின் அற்புத சுவை தெரிய ஆரம்பிக்கும். இப்போது ,இன்னது தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொள்ளாமல், மனம் சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், பிடித்த விஷயங்களை செய்து, பிரயத்தனமே இல்லாமல், தன் விருப்பப்படி வாழக் கற்றாலே, வாழ்க்கை பிரியமாகிப் போகும்.மனதில் எப்போதும் சந்தோஷக் கூத்தாட்டம் கிடைக்கும்.அந்தந்த நிமிடம், வாழும் கலை தெரியும்.

யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஓட்டம், நம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. இப்படியே தொடர்ந்து ஓடுவதால், கடைசியில் மிஞ்சப் போவது சோர்வே. அச்சோர்வை அடைந்த பின் தான் தெரியும் , நாம் ஏன், எதற்க்காக ஓடிக் கொண்டிருக்கிறோம், அதனால் ஏற்ப்பட்ட விளைவு என்ன என்பது..

மூன்று தாரக மந்திரத்தை அவ்வப்போது நமக்குள் சரி பார்த்துக் கொண்டாலே போதும், வாழ்வு சுலபப்பட்டு விடும். என் விருப்பப்படி, என் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறதா? வாழ்வின் எல்லா நிமிடங்களிலும், என் சந்தோஷம் கெடாமல் என் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளேனா? ஒரு குழந்தையைப் போல் என்னை நான் உணர்கிறேனா? இக்கேள்விகளுக்கு, திருப்தியான பதில்களை உங்களால் கொடுத்துக் கொள்ள முடிந்தாலே, உங்கள் வாழ்க்கை அற்புதமாக, உங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது ஒரு சூன்யம். ஒன்றுமே இல்லாதது. வெங்காயம் போல. உள்ளே எதாவது இருக்கிறதா என்ற ஆவலோடு தான் அதனை உரிக்க ஆரம்பிக்கிறோம். உள்ளே செல்ல செல்லத் தான், ஒன்றுமே இல்லை அங்கே என்பதை கண்டு கொள்ள நேரிடுகிறது. ஆனால், கண்டு கொண்டு சுதாரிக்கும் போது, நம் வாழ்க்கை முடியும் தருவாயில் போய் விடுகிறது. எத்துணை சீக்கிரம், வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை நாம் கண்டு கொள்கிறோமோ, அத்துணை சீக்கிரம், வாழ்க்கை சுலபமாகவும், சுவாரஸியமாகவும் ஆகிப்போகிறது.

எனவே, நமக்குள் கற்றறிவு நிரம்ப இருந்தாலும், குழந்தை தனத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்காமலும், குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே, வாழ்க்கை எனும் வெங்காயத்தை கண்ணீர் சிந்தி உரித்து, அதில் ஒன்றும் இல்லை என்பது உரிக்காமலேயே தெரிந்து கொள்ள சாத்தியப்பட்டுவிடும். அதனால் நமக்கு மிஞ்சப் போவது , நேரமும், அதனால் ஏற்படக் கூடிய விரையமில்லா வாழ்வுமே.

வாழ முயல்வோமா !

Monday, September 24, 2007

வாழ்க்கை - அர்த்தம்? ( தொடர்ச்சி - I)



நீண்ட கால அவகாசம் எடுத்தமைக்கு மன்னிப்பை கோருகிறேன்.எதிர்பாரத விதமாக அவகாசம் எடுக்க வேண்டியதாயிற்று.தங்கள் பொறுமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்:)

வாழ்க்கை - இதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். வாழ்வது தான் வாழ்க்கை. அவ்வளவாக மட்டுமே அதன் நோக்கம் இருக்க முடியும். ஆனால், நமக்கோ வாழ்க்கை என்பது தீர்த்து வைக்கும் பிரச்சனையாகவும், பிறப்பெடுத்ததே அதற்க்காகத்தான் என்பது போன்ற நோக்கம் கற்பிக்கப் பட்டது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.அல்லல் படுவதும் வாழ்க்கை என்பதும் தனித்தனி சொற்கள் இல்லை என்பது போலத் தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

எந்த நோக்கத்திற்க்காக நாம் பிறப்பெடுத்தோம் என்ற கேள்வி எல்லோர் மனதையும் தொடாமல் விட்டதில்லை. அர்த்தம் என்பது எல்லாவற்றிக்கும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய மனப்போக்கோடு நம் அணுகு முறை, எல்லா விஷயங்களிலும் இருப்பதினாலேயே, வாழ்க்கை என்பதும் ஒரு நோக்கத்திற்க்காக உண்டாக்கப் பட்டதாக நமக்கு எண்ணத் தோன்றுகிறது. சொல்லப் போனால், தத்துவார்த்தமாக வாழ்க்கையைப் நோக்கினால், அவரவர்க்கு ஏற்ற எண்ண வீச்சிற்க்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப வாழ்க்கைக்கு அர்த்தம் என்பது ஏற்படுகிறது. ஆனால் ஆன்மீக ரீதியில் வாழ்க்கையை உற்று நோக்கினால், வாழ்க்கைக்கு வாழ்வது என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என்பது புலனாகும்.

வாழ்க்கையை அது போகும் போக்கில் சென்று வாழ்ந்து அனுபவி - இது மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவனிடத்தில், வாழ்க்கை என்பதற்க்கு அர்த்தம், சுவையானதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அப்பொழுதும், அதற்கு இன்னது தான் அர்த்தம் என்பதை அவன் தெரிந்து, வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான் என்று சொல்ல முடியாது. எவ்வித அர்த்தமும், நோக்கமும் கற்பிக்கப் படாமல், வாழ்க்கை எப்படி செல்கிறதோ, அதன் வழியே சென்று அதை முழுதும் சுவைத்து அனுபவிக்க மட்டுமே அவன் கற்றுக் கொண்டு வாழ்கிறான் என்று தான் கூறமுடியும்.

நம்மில் பலருக்கும், வாழ்க்கை திருப்தி அளிக்கும்படியே இருக்கிறது. எப்படி? வாழ்வை பிரச்சனையாக நினைத்து, அப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயன்று , அதில் வெற்றி காணும் போது ஏற்படும் திருப்தி தான், வாழ்வு தரும் ச்ந்தோஷமாக நம்மால் உணரப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷம் என்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் அணுகும் முறை பெரும்பாலும், இப்படித்தான் இருக்கிறது.வயது முதிர முதிர, நமக்கு,இப்படித்தான் வாழ்வை அணுக வேண்டும் என்ற முறை சமுதாயத்தால் கற்பிக்கப் படுகிறது.

பிறந்த குழந்தையாக இருக்கும் போது, நாமே வாழ்வாகத்தான் பிறக்கிறோம். அத்துணை சக்தியோடு தான் நாம் இருக்கிறோம். நம்மில் இருக்கும் அந்த சக்தியை எந்த வித தடைகளுமின்றி செயல்படுத்தி ஆனந்தம் கண்டோம். காரணமே இல்லாமல் துள்ளிக் குதித்து மகிழ்ந்ததும் அதனால் தான். காரணம் வெகுளித்தனம்.வயதாக ஆக, எப்போது, வாழ்வை வாழ வேண்டும் என்ற விழிப்பு நமக்குள் நேரிடுகிறதோ, அப்படி இருத்தல் தான் வளர்ச்சியின் அறிகுறியாக நாம் முறைப்படுத்தி கொண்ட பட்சத்தில் வெகுளித்தனம் மறைந்து புத்திசாலித்தனம் மேலிட ஆரம்பிக்கிறது.

ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும், வெகுளித்தனம் மட்டுமே வாழ்வை அதன் போக்கிலேயே சென்று வாழ வழி வகை செய்ய முடியும். விஷய ஞானம் அளிக்கும் புத்திசாலித்தனம் தான், வாழ்க்கையை கடினப் படுத்தி, சுலபமாக வாழ வேண்டிய வாழ்க்கையை, கடினமான பாதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வேகுளித்தனம் மிகுந்தவர்களின் வாழ்வு, நிச்சயமாக புத்திசாலித்தனம் மிகுந்தவர் வாழ்வை விட சிறப்பாகத்தான் இருக்க முடியும்.

அதனால் தான் வெகுளித்தனம் மிக்க குழந்தைகளால், வாழ்வை அத்துணை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் சிறக்க வாழ் முடிகிறது. எப்போது, வெகுளித்தனத்தை , முற்றிலும் போக்கி, புத்திசாலித்தனத்தை மனம், அடைய முயல்கிறதோ, அப்போதே வாழ்வின் உண்மையான சுவை, வேறு விதமாக மாற்றப்பட்டு, இது தான் வாழ்க்கையின் சுவை என்று நமக்கு நாமே வகுத்துக் கொண்டு, நாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். இது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. எது ஒன்று இயற்கைக்கு முரண்பட்டு நிற்கிறதோ, அது நிச்சயமாக பலவீனமானதாகவும், நிரந்தரமில்லாததாகவுமே இருக்க முடியும். மாயை என்பதும் இது தான். இருப்பது போல இருக்கிறது. ஆனால், இல்லாததாகத் தெரிகிறது. வாழ்க்கை என்பது பல நேரங்களில் கசந்து போவதற்கு காரணம்,சில சூழ் நிலைகளில், அந்த எதார்த்தத்தை மனம் உணர்ந்து திரும்புதல் தான்.

( பதிவு நீண்டு விட்ட காரணத்தால் , அடுத்த பதிவில் தொடரலாம் என்று நினைக்கிறேன் )

Saturday, September 8, 2007

வாழ்க்கை - அர்த்தம்?


"வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்..

என்னடா பொல்லாத வாழ்க்கை..

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்..

மேற்கூறிய பாடல்கள் எல்லாமே வாழ்க்கை என்பது இப்படித் தானோ என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாடல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை என்பதே ஒரு நோக்கத்திற்க்காகத் தான் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது என்று தான் ஆதி முதல் அந்தம் வரையிலான, நமது புராணங்களும், இதிகாசங்களும் சொல்லி வந்திருக்கின்றன.

வாழ்க்கை என்பதன் குறிக்கோள் என்ன? வாழ்க்கையில் எதை நாம் தேடுகிறோம்? நம் பிறப்பின் பலன் என்ன?எதை சாதிக்க நாம் பிறந்தோம்? - இத்தகைய கேள்விகள் தொட்டுச் செல்லாத துடிப்புள்ள மனங்கள் குறைவு. அவரவர் சூழலுக்கேற்ப்வும், ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்பவும், நாம் இத்தகைய வினாக்களுக்கு தத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விளக்கங்களை தேடி,அவ்விளக்கங்களில்,சிலவற்றிக்கு உடன்பட்டும், சிலவற்றிற்கு உடன்படாமலும்,மேலும் சிலவற்றிக்கு, குழம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி..இது போன்ற கேள்விகள் எப்போது எழுகின்றன. அறிவின் தாக்கத்தை அறியும் வயதில் தான் இது போன்ற கேள்விகளும், தேடல்களும் அரும்ப ஆரம்பிக்கின்றன. கூர்ந்து கவனித்தோமேயானால், இவ்வகையான தேடல்களுக்கு முன் , நாம் எப்படி இருந்திருக்கிறோம்?. அதாவது, நம் குழந்தை பருவத்தில் நாம் எப்படி வாழ்வை எதிர் நோக்கியிருக்கிறோம் என்று சிந்தித்தால், எல்லோருக்குமே அதற்குண்டான விடை தெரியும். சின்ன வயசுல, நான் எவ்வளவு அற்புதமாக வாழ்கையை வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா..? என்று தான் பெரும்பாலும், சிறு பிராய வாழ்க்கையை ரசித்து கூறுபவர்கள் இருக்கக் கூடும். இது ஏன்? அத்தகைய வயதில் நமக்கு நிகழ்ந்தவை என்ன?

சிலர் கூறுவர் - " அந்த வயசுல..பெருசா பொறுப்புன்னு எதுவும் இல்ல.." ;

"எதெல்லாம் ரசிக்க முடியுதோ..சந்தோஷம் தருதோ..அதை எவ்வித தயக்கமும்மின்றி அந்த வயசுல பண்ண முடிஞ்சது.." - இது மற்றொருவரின் விளக்கம்.

இவ்வாறு நிறைய காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சிறிய வயதில், அறிவை பெரிய அளவில் வளர்க்காத வயதில், நாம் கண்ட இன்பத்தை, சிறுவயதைக் கடந்து, அறிவை பெறுக்கி, வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை அறிய விழையும் வயதில்,நம்மால் காண முடிகிறதா..? காண முடிகிறது என்றால் ஏன்?..காண முடிவதில்லை என்றால், ஏன் காண முடிவதில்லை?

சரி..! கருத்துப் பரிமாற்றத்திற்காக இப்பதிவை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் , கருத்துப் பகிர்தலோடு மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன். :)

Monday, September 3, 2007

மறுமை மரித்தால் பொறுமை..

வலைப்பதிவில் போடும் பதிவுகளைப் படிக்க ஆர்வம் காட்டுவதிலேயே பலரின் பொறுமை செவ்வனே விளங்குகின்றது. அதுவும், ஓரளவுக்கு நல்ல படிப்பாளிகளை சேர்த்துக் கொண்ட பதிவர்,போடும் மொக்கைப் பதிவுகள் கூட, படிப்பாளிகளின் பொறுமையைத் தான் சுட்டிக் காட்டுகிறது.ஒரளவு கணித்து வைத்திருக்கும், மனதிற்கு பிடித்த பதிவுகளை போடும் பதிவர், நடு நடுவில், "இவரா...இப்பதிவை எழுதினார்" என்று வியக்கும் வண்ணம் பதிவுகளைப் போட்டாலும், அதையும் பொறுமையாகப் படித்து, மறுமொழி எழுதும் எத்துணையோ படிப்பாளிகளை எண்ணி நான் வியந்திருக்கிறேன்.

ஆக..பொறுமை என்பது, நமக்கு பிடித்த விஷயங்க்ளில், நமக்கும் தெரியாமல், நம்மோடு இயைந்தே இருக்கிறது.ஆனால், நாம் பொறுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை அவ்வளவு சாதாரணமாக நம்மால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும், நமக்கு பொறுமை இல்லையோ என்று தான் நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மிடம் அளவற்ற பொறுமை நிறைந்து கிடக்கிறது.ஆனால், எல்லா விஷயங்களிலும் , பொறுமை காட்டமுடியாததால், நமக்கு நாம் பொறுமையாக இல்லை என்ப்தையே ஒரு தீர்வாக நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்.

சரி..பொறுமை என்பதை எதோடு சம்பந்தப் படுத்தி பார்க்கிறோம் நாம். நம்மைச் சுற்றி, நடக்கும் தீமைகளை சகித்துக் கொள்வதாகவே நாம் பொறுமையை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். நமக்கு பிடிக்காத காரியங்களை மற்றவர் செய்யும்போது பொறுமை இழக்கிறோம். ஆனால், நமக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும், பிடித்த நபர் செய்யும் போது, எங்கே இருந்து திடீரென்று நமக்கு பொறுமை வருகிறது. அப்போது என்ன நடக்கிறது. நமக்கு பிடித்த நபர், நமக்கு பிடிக்காத காரியங்களைச் செய்தாலும், அவர்களை அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான், தத்தம் குழந்தைகள் எத்தகைய பொறுமை மீறும் காரியங்களைச் செய்தாலும், பெற்றோர்களால், சுலபமாக அதை ஏற்க முடிகிறது.

குழந்தைகள, மனதிற்க்கு பிடித்தவர்களிடம் பொறுத்துப் போகிறோம் சரி...ஆனால், வெளி வட்ட நபர்கள் செய்யும் காரியங்களோ, அல்லது அவர்து போக்கோ நமக்கு பிடிக்காத பட்சத்தில், பொறுமையை பூரணமாக இழந்து விடுகிறோமே.எப்படித் தவிர்ப்பது அதை. புரிந்து கொள்ளலால் தான் சாத்தியம் அது.

ஒன்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்ப்பார்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது, என்று சிந்தித்தாலே, பொறுமை இழக்கும் காரியங்களை யார் செய்தாலும் அதற்கு எந்த விதமான முக்கியத்துவத்தையும் நாம் தராமல் பார்த்துக் கொள்ள முடியும். நாம் பொறுமை இழக்கும் சமயத்திலெல்லாம்,அவதிப் படுவோர் நாம் தான். நம் மன அமைதியை நாம் தான் கெடுத்துக் கொள்கிறோம். கோவம் கொள்கிறோம், வெறுப்படைகிறோம். இது நமக்கு இப்போது தேவை தானா என்று யோசித்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுகெல்லாம், நம் உணர்வுகளை நாம் பலியாக்குகிறோம் என்பது விளங்கும். அதோடு மட்டுமில்லாமல், பொறுமை இழத்தலினால், மிகுந்த ஏமாற்றமும், அதோடு அது நீடிக்கும் மன நிலையையும் தான் நாம் பெறுகிறோம்.

உதாரணத்திற்கு சொல்வதானால், பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, பேருந்து வர கால தாமதமாகி விட்டால், பொறுமை இழந்து தவிக்கிறோம். அப்படி பொறுமை இழப்பதினால், நடக்க கூடியது என்ன. அதனால் ஏற்படும் லாபம் என்ன.பேருந்து வந்து விடப் போகிறதா.. செல்லக் கூடிய இடத்திற்கு கால தாமதம் ஆகத்தான் செய்யும். ஆனால், பொறுமையிழப்பதால், அந்த விளைவை நாம் மாற்றி விட முடியுமா..என்பதை கண நேரம் சிந்தித்தாலே, அங்கே காத்துக் கொண்டிருக்கும் நிலையை நாம் ஏற்றுக் கொண்டு விடுவோம். அதனால், மன அமைதியும் உண்டாகும்.

மற்றவரின் செயல் கண்டு பொறுமை இழக்கும் சூழல் ஏற்படுகிறதா..அவர்கள் செய்வது அவர்களது அறியாமையினால் தான்..என்று நமக்கு நாமே விளக்கம் கொடுத்துக் கொண்டாலே போதும். பொறுமை இழ்க்க வேண்டிய அவசியம் இருக்காது. நமக்கு வேண்டியவர்கள், நமக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யும் போது, அன்பின் நிமித்தமாக பொறுமையை கையாள நாம் எப்படி பழகிக் கொள்கிறோமோ, அதே போல், நமக்கு அன்னியமானவர்களின் காரியங்களில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்களது அறியாமையினால் தான் அது நடந்தது என்று நாம் சிந்திக்கும் பட்சத்தில், நம்மால், பொறுமை இழக்காமல் எப்பவும், மன நிம்மதி பெறமுடியும்.

ப்யிற்சியின் மூலம் பொறுமை இழக்கின்ற பழக்கத்தை மெள்ள மெள்ள குறைத்துக் கொண்டுவிடலாம். ஒரு நாளில், சில நிமிடங்களாவது, எனக்கு ஒவ்வாத காரியங்கள் நிகழந்தாலும் பொறுமையாக இருப்பேன் என்று நமக்கு நாமே தீர்மானம் செய்து கொண்டால் தான், பொறுமையை பழக்கத்தில் கொண்டு வர இயலும். எது நடந்தாலும் பொறுமையாக இருக்க, சிறு சிறு விதமாக நாம் பழகக் கூடிய இப்பழக்கம் தான் துணையாக இருக்கும். காலப்போக்கில், பொறுமையாக இருப்பது பழக்கமாக ஒன்றாகி விடுவதோடு, உணர்ச்சி வயப்படாமல் எதையும் சரியான கோணத்தில் பார்கினற கலையையும் நாம் கற்றுக் கொண்டு விடலாம்.